விண்ணப்பதாரரை 'நேர்மையற்றவர்' என கூறுவதா: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
விண்ணப்பதாரரை 'நேர்மையற்றவர்' என கூறுவதா: பசுமை தீர்ப்பாயம் கண்டனம்
ADDED : பிப் 08, 2024 01:33 AM
சென்னை:விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தாலுகா, செம்மேடு கிராமத்தில் உள்ள தன் பட்டா நிலத்தில் கருப்பு கிரானைட் கல் குவாரிக்கு சுற்றுச்சூழல் அனுமதி கோரி மிதுன் குமார் என்பவர் விண்ணப்பித்திருந்தார்.
இந்த மனுவை மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் நிராகரித்தது. இதை எதிர்த்து அவர் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அளித்த தீர்ப்பு:
தன் பட்டா நிலத்தில் கல் குவாரி அமைக்க அனுமதி நிராகரிக்கப்பட்ட உத்தரவில், 'நேர்மையற்றவர்' என, மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் குறிப்பிட்டிருப்பது, தங்களது நிறுவனத்திற்கு பெரும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என மனுதாரரின் வழக்கறிஞர் வாதிட்டார்.
இது மனுதாரரின் முதல் திட்டம் என்பதால், அந்த வார்த்தையை நீக்க வேண்டும் என கோரியுள்ளார்.
சுற்றுச்சூழல் அனுமதிக்காக எத்தனை முறை விண்ணப்பித்தாலும், அதை ஆணையம் ஆய்வு செய்ய வேண்டும்.
அதில் சந்தேகங்கள் இருந்தால், சம்பந்தப்பட்டவர்களுடன் ஆலோசிக்க வேண்டும். நிராகரிக்கப்பட்டால் அதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.
மாறாக கல் குவாரிக்கு விண்ணப்பித்தவரை, 'நேர்மையற்றவர்' என ஆணையம் குறிப்பிடுவது ஒரு சார்பானது; நியாயமற்றது; ஆதாரமற்றது.
மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் இந்த அணுகுமுறை தேவையற்றது.
எனவே, 'நேர்மையற்றவர்' என்ற வார்த்தை நீக்கப்படுகிறது. சுற்றச்சூழல் அனுமதிக்கான விண்ணப்பத்தை ஆணையம் உரிய முறையில் ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும்.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

