ஒரு டாக்டர் 24 மணி நேரமும் செயல்பட முடியுமா? அரசுக்கு செவிலியர் சங்கம் சரமாரி கேள்வி
ஒரு டாக்டர் 24 மணி நேரமும் செயல்பட முடியுமா? அரசுக்கு செவிலியர் சங்கம் சரமாரி கேள்வி
UPDATED : நவ 07, 2024 03:38 AM
ADDED : நவ 06, 2024 10:49 PM

சென்னை:'ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு டாக்டரை மட்டும் வைத்து எப்படி 24 மணி நேரமும் தரமான மருத்துவ சேவையை வழங்க முடியும்?' என, தமிழ்நாடு எம்.ஆர்.பி., செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தினர் கேள்வி எழுப்பிஉள்ளனர்.
இதுகுறித்து, அச்சங்கத்தினர் வெளியிட்டுள்ள அறிக்கை:
'தமிழகத்தில் புதிதாக, 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்; கட்டண வார்டுகளும் அதிகரிக்கப்படும்' என, அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.
இலவச வார்டுகளுக்கும், கட்டண வார்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? அரசு மருத்துவமனைகளில் பணம் கட்டி சிகிச்சை அளிப்பதுதான், திராவிட மாடலுக்கு பெருமையா?
அரசின் கீழ் இயங்கும் ஒரு மருத்துவமனையில், எளியவனுக்கு ஒரு விதமான சிகிச்சை; கட்டணம் செலுத்துவோருக்கு ஒருவிதமான சிகிச்சைதான், நீங்கள் பேசும் சமூக நிதியா?
இன்னும், 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும் என்பதை வரவேற்கிறோம். ஏற்கனவே இருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில், 24 மணி நேரமும் பணியாற்ற டாக்டர்கள் நியமனம் செய்துள்ளீர்களா?
ஆரம்ப சுகாதார நிலையங்கள், 24 மணி நேரமும் செயல்படுவதாக பெருமை பேசுகிறீர்கள். பெரும்பாலான ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஒரு டாக்டரை வைத்து தான் செயல்படுகின்றன; அந்த ஒரு டாக்டரை வைத்து எப்படி 24 மணி நேரம் தரமான சிகிச்சை அளிக்க முடியும்?
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.