ரூ.2.8 கோடி அபாரதம் விதிக்கலாமா? திருப்பூர் மாநகராட்சிக்கு எச்சரிக்கை
ரூ.2.8 கோடி அபாரதம் விதிக்கலாமா? திருப்பூர் மாநகராட்சிக்கு எச்சரிக்கை
ADDED : பிப் 08, 2025 01:00 AM
திருப்பூர்,:'திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை சரிவரக் கையாளாத திருப்பூர் மாநகராட்சிக்கு, 2.80 கோடி ரூபாயை இடைக்கால அபராதமாக ஏன் விதிக்கக்கூடாது' என, பசுமை தீர்ப்பாயம் கேள்வி எழுப்பியது.
திருப்பூர் மாநகராட்சியில், குப்பை கொட்ட பிரத்யேக இடமில்லாததால், காளம்பாளையம் பாறைக்குழியில், மாநகராட்சி குப்பையை கொட்டி வந்தது.
'இது, சட்ட விரோதம்; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு, நிலம், நீர், காற்று மாசுபட்டு வருகின்றன' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு அணி மாநில செயலர் சதீஷ்குமார், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.
வழக்கில், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கை அடிப்படையில், சமீபத்தில் பசுமை தீர்ப்பாயம் பிறப்பித்த உத்தரவு:
தரம் பிரிக்கப்படாத குப்பையை பாறைக்குழியில் கொட்டுவதை மாநகராட்சி தவிர்க்க வேண்டும். திடக்கழிவு மேலாண்மை விதியை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.
குப்பையை தரம் பிரித்து வாங்கவும், அதை உரிய முறையில் வகைப்படுத்தி, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்.
பாறைக்குழியில் கொட்டப்பட்ட பல்வேறு வகை குப்பையை உடனடியாக திரும்ப எடுக்க வேண்டும். உறுதியான மற்றும் அறிவியல் முறையில் திடக்கழிவுகளை கையாள்வது தொடர்பாக, குறுகிய மற்றும் நீண்டகால திட்டத்தை, ஒருமாத காலத்திற்குள் தயார் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
அனைத்து துாய்மை பணியாளர்களுக்கும் உரிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவும், அவர்கள் சரியான பாதுகாப்பு மற்றும் சுகாதாரமான சூழலில், பணிபுரிவதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு, உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியை பின்பற்றாதது; சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுத்தியதற்காக, 2.80 கோடி ரூபாயை இடைக்கால அபராதமாக ஏன் விதிக்கக்கூடாது என, அந்த உத்தரவில் கேள்வியாக எழுப்பப்பட்டுள்ளது.