ஒதுக்கீடு செய்த வீட்டை ரத்து செய்வது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்
ஒதுக்கீடு செய்த வீட்டை ரத்து செய்வது இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்
ADDED : ஜூன் 27, 2025 12:35 AM
சென்னை:'வீடு ஒதுக்கீடு செய்துவிட்டு, பின் ரத்து செய்வது, இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்' என, சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மறைந்த கருணாநிதியின், 97வது பிறந்த நாளை முன்னிட்டு, ஞானபீடம், சாகித்ய அகாடமி விருதுகள் பெற்று, தமிழுக்கு தொண்டாற்றிய எழுத்தாளர்களை கவுரவிக்கும் வகையில், 2022ல் கனவு இல்லம் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
இத்திட்டத்தில், 'கல்மரம்' நாவலுக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற, தமிழகத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ்., அதிகாரி திலகவதிக்கு, சென்னை அண்ணா நகரில், 1,400 சதுரடி வீடு, 2022ல் ஒதுக்கப்பட்டது.
இவர் ஏற்கனவே, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தில் வீடு ஒதுக்கீடு பெற்றுள்ளதாக கூறி, கனவு இல்லம் திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்த உத்தரவை, 2024ல், அரசு ரத்து செய்தது.
இதை எதிர்த்து திலகவதி தொடர்ந்த வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, கவிஞர் மேத்தா உள்ளிட்டோருக்கும் கனவு இல்லம் திட்டத்தில் வீடு ஒதுக்கப்பட்டு ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
வீடு ஒதுக்கும்படி யார் கேட்டது; அரசே வீடு ஒதுக்கிவிட்டு ரத்து செய்தது, உயரிய விருதுகளை பெற்ற இலக்கியவாதிகளை அவமதிக்கும் செயல்; துரதிருஷ்டவசமானது. இலக்கியவாதிகளை இவ்வாறு நடத்தக்கூடாது.
தமிழுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை, கருணாநிதி தன் வாழ்நாள் இறுதிவரை கவுரவப்படுத்தினார். தற்போது அரசு பிறப்பித்துள்ள திருத்த அரசாணை, கருணாநிதியின் விருப்பத்திற்கு முரணானது. இந்த அரசு, கருணாநிதியின் விருப்பத்திற்கு மாறாக செயல்படாது என, நம்புகிறேன்.
திருத்தம் செய்வதாக இருந்தால்கூட, முன் தேதியிட்டு அமல்படுத்தக் கூடாது. கவிஞர் மேத்தாவுக்கு வீடு ஒதுக்கிவிட்டு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்ய உள்ள வழக்குடன், இந்த வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஜூலை 9க்கு தள்ளிவைத்தார்.

