30 வயது தாண்டிய மகளிருக்கு புற்றுநோய் சோதனை அவசியம்
30 வயது தாண்டிய மகளிருக்கு புற்றுநோய் சோதனை அவசியம்
ADDED : அக் 22, 2024 06:32 AM
சென்னை, : ''தமிழகத்தில், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மாதவிடாய் ஏற்பட்ட பின், சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்,'' என, பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.
தமிழகத்தில், 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும், புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். அதை வலியுறுத்தும் வகையில், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமரி, திருப்பத்துார் மாவட்டங்களில், புற்றுநோய் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த நான்கு மாவட்டங்களில், இதுவரை, 5.24 லட்சம் பேருக்கு நடந்த வாய் புற்றுநோய் பரிசோதனையில், 2,555 பேருக்கு அறிகுறி கண்டறியப்பட்டது.
அதேபோல, 2.2 லட்சம் பேரிடம் நடத்திய மார்பக புற்றுநோய் பரிசோதனையில், 4,618 பேருக்கும்; 1.75 லட்சம் பேருக்கு நடத்திய கர்ப்பப்பை புற்றுநோய் பரிசோதனையில், 9,331 பேருக்கும் நோய் அறிகுறி இருபது தெரியவந்தது. அவர்கள் அனைவருக்கும், தொடர் மருத்துவ பரிசோதனை அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை ஒட்டி, பெண்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க, பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.
இதுகுறித்து, பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது:
தமிழகத்தில் புற்றுநோயால் ஏற்படும் மொத்த இறப்பில், 70 சதவீதம் மார்பக புற்றுநோய் பாதிப்பால் ஏற்படுகிறது. பெரும்பாலானோர், புற்றுநோய் முற்றிய நிலையில் வருகின்றனர். வாழ்க்கை முறை மாற்றத்தால், அனைவருக்கும் புற்றுநோய் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, 30 வயதுக்கு மேற்பட்டோர் கட்டாயம் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாதவிடாய் முடிந்த ஒரு வாரத்தில், பெண்கள் சுய மார்பக புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்ளலாம்.
இந்த காலங்களில், மார்பு சதைகள் இலகுவாக இருப்பதால், வலி மற்றும் வீக்கம் இருந்தால் கண்டறிய முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.