கார் பார்க்கிங் தகராறு: நடிகர் தர்ஷன் மீதான வழக்குகள் ரத்து
கார் பார்க்கிங் தகராறு: நடிகர் தர்ஷன் மீதான வழக்குகள் ரத்து
ADDED : மே 01, 2025 12:50 AM

சென்னை:காரை நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக, நடிகர் தர்ஷன் மற்றும் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியின் மகன் இடையே சமரசம் ஏற்பட்டதால், இரு தரப்பினருக்கும் எதிராக, பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
'பிக்பாஸ் சீசன்- - 3' நிகழ்ச்சி வாயிலாக பிரபலமானவர் தர்ஷன். இவருக்கும், ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதியின் மகனுக்கும் இடையே, கார் நிறுத்துவதில் தகராறு ஏற்பட்டு கைகலப்பானது.
இதில், ஒரு பெண்ணும், நீதிபதியின் மகனும் காயமடைந்தனர். நண்பருடன் சேர்ந்து தர்ஷன், தங்களை தாக்கியதாக, நீதிபதியின் மகன் தரப்பில், சென்னை ஜெ.ஜெ.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
அதேபோல, தர்ஷன் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. இந்த இரு புகார்களின் அடிப்படையில், வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நடிகர் தர்ஷன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தர்ஷன் தரப்புக்கும், தங்கள் தரப்புக்கும் இடையே சமரசம் ஏற்பட்டதால், தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, நீதிபதியின் மகன் ஆதிச்சூடி, அவரது மனைவி லாவண்யா, மாமியார் மகேஸ்வரி தரப்பிலும், தர்ஷன், அவரது நண்பர் லோகேஷ் தரப்பிலும், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், இரு தரப்பிலும் தாக்கல் செய்த, சமரச மனுக்களை ஏற்று, தர்ஷன், அவரது நண்பர், நீதிபதியின் மகன், மனைவி, மாமியார் ஆகியோர் மீது பதியப்பட்ட, இரண்டு வழக்குகளையும் ரத்து செய்து உத்தரவிட்டார்.

