ADDED : பிப் 17, 2024 12:27 AM
சென்னை:முன்னாள் அமைச்சர்கள் முனுசாமி, தங்கமணி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
கடந்த ஆண்டு ஜனவரியில், கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில், அ.தி.மு.க., சார்பில் கண்டன கூட்டம் நடந்தது. தமிழக அரசைக் கண்டித்து இந்த கூட்டம் நடந்தது.
இதில், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, தங்கமணி, சீனிவாசன், விஸ்வநாதன், எம்.ஆர்.விஜயபாஸ்கர் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் பங்கேற்றனர்.
பொதுமக்களுக்கு, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, அவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
11 பேர்
கரூர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேர், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. அரசியல் பழிவாங்கும் விதத்தில், இந்த வழக்கு தொடரப்பட்டதாக, மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, 11 பேருக்கு எதிரான வழக்கை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.
பெரியகருப்பன்
கடந்த 2021ல் நடந்த சட்டசபை தேர்தலின் போது, நடத்தை விதிகளை மீறி பிரசாரம் செய்ததாக, அமைச்சர் பெரியகருப்பனுக்கு எதிராக, சிவகங்கை மாவட்டம், பூலாங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
தி.மு.க.,வினருக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி, அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோர் சார்பில், வழக்கறிஞர் முத்துராமலிங்கம் மனுத்தாக்கல் செய்தார். அதில், குற்றச்சாட்டில் முகாந்திரம் இல்லை என்றும் கூறியிருந்தார்.
இம்மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. அமைச்சர் பெரியகருப்பன் உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கை, நீதிபதி ரத்து செய்தார்.