ADDED : பிப் 06, 2024 11:58 PM
சென்னை:பா.ஜ., நிர்வாகியான ஜெயலட்சுமி அளித்த புகாரில், பாடலாசிரியர் சினேகன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சினிமா பாடலாசிரியர் சினேகன். இவர், 'பா.ஜ., மாநில மகளிர் அணி துணை தலைவி ஜெயலட்சுமி, சினேகன் அறக்கட்டளை பெயரைக் கூறி, பொதுமக்களிடம் பணம் வசூலித்து மோசடி செய்துவிட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, 2022 ஆகஸ்டில், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.
இதேபோல, பாடலாசிரியர் சினேகன், தன் மீது தவறான குற்றச்சாட்டை சுமத்தி, தன் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக, 2022 அக்டோபரில், திருமங்கலம் போலீசில் ஜெயலட்சுமியும் புகார் அளித்தார். சினேகன் மீது திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், சினேகன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தமிழ்செல்வி, சினேகன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

