எஸ்.பி.,க்கு எதிரான வழக்கு * தீர்ப்பு ஒத்திவைப்பு
எஸ்.பி.,க்கு எதிரான வழக்கு * தீர்ப்பு ஒத்திவைப்பு
ADDED : ஏப் 24, 2026 07:36 PM
மதுரை: தஞ்சாவூர் எஸ்.பி.,யாக இருந்த ஆசிஷ் ராவத்திற்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிய கீழமை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தீர்ப்பை ஒத்திவைத்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.தஞ்சாவூர் கார்த்திகேயன். இவர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி.,யாக ஆசிஷ் ராவத் 2023 ல் பணிபுரிந்தார். அப்போது போலீஸ் குடியிருப்பில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டன. குடியிருப்பு கட்டடங்கள் கட்டுமான டெண்டர் விடுவதில் விதிகளை பின்பற்றவில்லை. காவலர்கள் நலன் சங்கம் பொது நிதியில் முறைகேடு நடந்தது.
விசாரணை கோரி லஞ்ச ஒழிப்புத்துறைக்கு புகார் அனுப்பினேன். ஆசிஷ் ராவத் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். அந்நீதிமன்றம்,'புகாரை விசாரித்து முகாந்திரம் இருக்கும்பட்சத்தில் ஆசிஷ் ராவத் மீது வழக்கு பதிய வேண்டும்,' என உத்தரவிட்டது. இதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர், தஞ்சாவூர் எஸ்.பி.,உயர்நீதிமன்றக் கிளையில் மேல்முறையீடு செய்தனர். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா: சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் வழக்கு பதிய கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. சம்பந்தப்பட்ட எஸ்.பி., அல்லது லஞ்ச ஒழிப்புத்துறையிடம் விளக்கம் கோரவில்லை. அரசின் முன் அனுமதியின்றி அரசு ஊழியர் மீது விசாரணை நடத்த முடியாது. நேர்மையான அதிகாரிகளுக்கு அரசு துணை நிற்கும். கார்த்திகேயன் தரப்பு வழக்கறிஞர்: கீழமை நீதிமன்ற உத்தரவு சரியே. அரசின் முன் அனுமதி தேவையில்லை. இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி தீர்ப்பை ஒத்திவைத்தார்.
