'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்டத்துக்கு தடை கோரி வழக்கு
'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ திட்டத்துக்கு தடை கோரி வழக்கு
ADDED : ஆக 06, 2025 06:44 AM

சென்னை : முதல்வர் துவக்கி வைத்த, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்துக்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம், சேலையூரை சேர்ந்த வழக்கறிஞர் எம்.சத்யகுமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: அரசு பணத்தில், அரசு ஊழியர்களை கொண்டு செயல்படுத்தப்படும் இந்த திட்டத்துக்கு முதல்வர் பெயரை வைப்பது தவறானது.
இந்த திட்டம், ஓராண்டு நடைமுறையில் இருக்கும் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. அடுத்தாண்டு, சட்டசபை தேர்தல் வரவுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலினின் தனிப்பட்ட பிம்பத்தை பிரபலப்படுத்தும் வகையில், இந்த திட்டம் விளம்பரப்படுத்தப்படுகிறது. தனியார் தன்னார்வலர்கள் வாயிலாக, இந்த திட்டம் செயல்படுத்தப்படும் நிலையில், மக்களிடம் இருந்து பெறப்படும் மருத்துவ ரீதியான தரவுகள் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது. இது, அரசியலமைப்பு வழங்கிய தனியுரிமையை மீறுவதாகும்; உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளுக்கு எதிரானது.
எனவே, அரசியலமைப்புக்கு எதிரான, 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும். பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட தரவுகளை நிரந்தரமாக அழிக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

