டி.எஸ்.பி., மீது வழக்கு பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் எச்சரிக்கை
டி.எஸ்.பி., மீது வழக்கு பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் எச்சரிக்கை
ADDED : பிப் 17, 2025 12:48 AM
சென்னை: ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக டி.எஸ்.பி., கலைச்செல்வன் மீது, மானநஷ்ட ஈடு வழக்கு தொடர உள்ளதாக, பதிவுத்துறை அலுவலர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முத்திரைத்தாள் கட்டணத்தை குறைத்து வசூலித்து, அரசுக்கு, 1.34 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக, திருப்பத்துார் மாவட்ட பதிவாளர் செந்துார்பாண்டியன் வீட்டில், லஞ்ச ஒழிப்பு போலீசார் சமீபத்தில் ஆறு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தினர்.
இதுகுறித்து, தமிழக பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் செந்துார்பாண்டியன், பொதுச் செயலர் உத்தமசிங், பொருளாளர் பாவேந்தன் மற்றும் நிர்வாகிகள் வெளியிட்ட அறிக்கை:
கொரோனா காலத்தில் பதிவுத்துறை உதவியாளர்களும், சார் - பதிவாளர் பொறுப்பில் பணியாற்றுவது வழக்கமாக இருந்தது.
அதன்படி, செங்கல்பட்டு இணை சார் - பதிவகத்தில், உதவியாளர் ராமமூர்த்தியால், நின்னகரை கிராம சொத்தும், படப்பை சார் - பதிவக எல்லைக்கு உட்பட்ட இரண்டு சொத்துக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், தவறு ஏதும் நடந்ததாக தெரியவில்லை.
பதிவு செய்யப்படும் ஆவணங்களுக்கு, சார் - பதிவாளர் பொறுப்பில் இருந்து பதிவு செய்தவர்களே பொறுப்பு. ஆனால், அப்போது சார் - பதிவாளராக இருந்த, பதிவுத்துறை அனைத்து ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் செந்துார் பாண்டியன் மீது, பொய்யான புகார் கூறப்பட்டுள்ளது வியப்பாக உள்ளது.
அவர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தவறான தகவல்களை பரப்பி, செந்துார் பாண்டியனை பொதுவெளியில் அசிங்கப்படுத்திய, காஞ்சிபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக டி.எஸ்பி., கலைச்செல்வன் மீது, நீதிமன்றத்தில் மானநஷ்டஈடு வழக்கு தொடரப்படும். இது தொடர்பாக, தமிழக அரசு விரிவான விசாரணை நடத்த வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

