தெரு நாய்களை கண்டறிய 'சிப்' டெண்டருக்கு தடை கோரி வழக்கு
தெரு நாய்களை கண்டறிய 'சிப்' டெண்டருக்கு தடை கோரி வழக்கு
ADDED : மே 31, 2025 06:20 AM
சென்னை: தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதமாக மேற்கொள்ள, 5.20 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டருக்கு தடை விதிக்கக்கோரி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தெரு நாய்கள் இனப்பெருக்க கட்டுப்பாடு பணிகளை துரிதமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து, சென்னையில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்களை கண்டறிய, அவற்றுக்கு, 'சிப்' பொருத்தும் பணிகளுக்கு, 5 கோடியே, 20 லட்சத்து, 57,200 ரூபாய் மதிப்பில், 'டெண்டர்' கோரப்பட்டது.
இந்நிலையில், இந்த டெண்டருக்கு தடை விதிக்கவும், திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்ய தடை கோரியும், சென்னை கோட்டூரை சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர் முரளிதரன், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'விலங்குகள் இனப்பெருக்க கட்டுப்பாடு விதிகளை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், சட்டத்திற்கு விரோதமாக, டெண்டர் கோரப்பட்டுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் செந்தில்குமார் ராமமூர்த்தி, டி.வி.தமிழ்செல்வி அடங்கிய அமர்வு, இந்த மனுவுக்கு பதிலளிக்க, மத்திய மற்றும் மாநில விலங்குகள் நல வாரியம், கால்நடை துறைக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஜூன், 20ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.