ADDED : ஆக 22, 2026 07:00 AM

மதுரை: புற்றுநோய் பாதிப்பு ஏற்படுத்தும் நெய் மூக்குப்பொடி தயாரிப்புக்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஒத்திவைத்தது.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே பள்ளப்பட்டி மற்றும் அருகிலுள்ள கிராமங்கள் நல சங்கம் தலைவர் காஜா நவாஸ் அலி தாக்கல் செய்த பொதுநல மனு:
எங்கள் பகுதியில் புகையிலையை மூலப்பொருளாகக் கொண்டு மூக்குப்பொடி என்ற வாய்ப்பொடியை நெய்பொடி என்ற பெயரில் சில நிறுவனங்கள் தயாரிக்கின்றன. இவை புற்றுநோய், பக்கவாதத்தை உண்டாக்கும். இவற்றை தமிழகம் மட்டுமன்றி ஆந்திரா, கர்நாடகாவிலுள்ள கடைகளுக்கும் அனுமதியின்றி விற்பனைக்கு அனுப்புகின்றனர். தடையை மீறி 18 வயதிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு விற்பனை செய்கின்றனர்.
இதை தயாரிக்கும் நிறுவனங்களிலிருந்து வெளியாகும் புகையால் அருகில் வசிக்கும் மக்களுக்கு கண் எரிச்சல், சுவாச பிரச்னை, தோல்நோய் ஏற்படுகிறது. நெய் மூக்குப்பொடி தயாரிக்கும் நிறுவனங்களை தடை செய்யக்கோரி உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர், கலெக்டருக்கு மனு அனுப்பினோம். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் ராமநாதன் ஆஜரானார்.
நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: சம்பந்தப்பட்டவர்களை எதிர்மனுதாரர்களாக இணைக்க வேண்டும். விசாரணை அக்.6க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனர்.
