ADDED : டிச 03, 2024 11:43 PM
சென்னை:தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், கடலுார் மாவட்டத்தில், மோட்டார் வாகனம், பிளாஸ்டிக், இன்ஜினியரிங் உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டுள்ள குறு, சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
பல்வேறு இடங்களில் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளதால், முந்திரி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு, தினமும் 7 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கடலுார் மாவட்ட சிறு, குறுந்தொழில் சங்கத்தின் தலைவர் அசோக் கூறியதாவது:
கடலுாரில் கஸ்டம்ஸ் ரோடு மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 50க்கும் மேற்பட்ட குறு, சிறு நிறுவனங்கள், மோட்டார் வாகன பழுதுபார்ப்பு உள்ளிட்ட தொழிலில் ஈடுபட்டுள்ளன.
நிறுவனங்களுக்குள், திடீரென வெள்ள நீர் புகுந்ததால், நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி விட்டன. வாகனத்திற்கு காப்பீடு இருந்தாலும், முழு இழப்பீட்டு தொகையும் கிடைக்காது.
மருங்கூரில், முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் அதிக அளவில் உள்ளன. தொடர்ந்து மின்சாரம் இருந்தால் தான் ஆலைகள் செயல்படும்.
வெள்ளப்பெருக்கால் மின் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், முந்திரி பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு மட்டும், தினமும் 7 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படுகிறது.
எனவே, விரைவாக மின்சாரம் மற்றும் உரிய நிவாரணம் வழங்குவதுடன், மின்சார நிலை கட்டணத்தில், 20 சதவீதம் மட்டும் வசூலிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.