ADDED : ஜன 03, 2024 10:26 PM

சிதம்பரம்:“தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால், மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்,” என, பா.ம.க., தலைவர் அன்புமணி எச்சரித்துள்ளார்.
பா.ம.க., சார்பில், ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு கருத்தரங்கம் சிதம்பரத்தில் நடந்தது. பா.ம.க., தலைவர் அன்புமணி பேசியதாவது:
ஆங்கிலேயர் காலத்து கணக்குப்படி, தற்போதும் இட ஒதுக்கீடு கொடுத்து வருகின்றனர். சமூக நீதி நிலைநாட்ட வேண்டும் என்றால் இட ஒதுக்கீடு வரவேண்டும். கடந்த 2021ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., சார்பில் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐபேக் குழுவினர் ஒவ்வொரு தொகுதியிலும் எந்த ஜாதி உள்ளனர் என, புள்ளி விபரம் சேகரித்தனர்.
தேர்தலுக்காக புள்ளி விபரம் எடுத்த தி.மு.க., வினர், மக்கள் முன்னேற இட ஒதுக்கீடு தர மறுக்கிறது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில், 69 சதவீத இட ஒதுக்கீட்டை தமிழ்நாட்டில் கொண்டு வந்து, அதை ஒன்பதாவது அட்டவணையில் பாதுகாப்பாக வைத்தார்.
ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுப்பதற்கு எங்களுக்கு அதிகாரம் இல்லை என, முதல்வர் ஸ்டாலின் கூறுவது தவறாகும்.
அரசியல் சட்டப்படி நகர்மன்ற தலைவர் கூட நகராட்சி பகுதியில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தலாம். தமிழகத்தில் இன்னும் இரண்டு மாதத்தில் எம்.பி., தேர்தல் வரவுள்ளது. அதற்கு முன்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், என தமிழக முதல்வர் அறிவிக்க வேண்டும்.
ஜாதி பார்த்து அமைச்சர் பதவி கொடுக்கும் தி.மு.க. அரசு, ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஏன் மறுக்கிறது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவில்லை என்றால் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.