ADDED : ஜூன் 27, 2025 12:38 AM
சென்னை:நாடு முழுதும் ஜாதிவாரியாக மக்கள்தொகை கணக்கெடுக்கும் பணியை, 2027ம் ஆண்டு மார்ச் மாதம் துவங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் இப்பணியை மேற்கொள்வதற்கு, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சுந்தரேஷ் பாபு நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர், நேற்று சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார்.
பின், அவர் கூறியதாவது:
மத்திய அரசு அறிவித்தபடி, தமிழகத்தில் உள்ள அனைத்து ஜாதிகள் குறித்தும் விரிவான கணக்கெடுப்பு நடத்தப்படும். அடுத்தாண்டு சட்டபை தேர்தலுக்கு பின், இதற்கான முன்னேற்பாடுகள் முறைப்படி துவங்கும். இப்பணியில், 1.50 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
முதல் முறையாக, 'டிஜிட்டல்' முறையில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. மாவட்ட கலெக்டர்கள், அந்தந்த மாவட்டங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர்களாக செயல்படுவர்.
இவ்வாறு அவர் கூறினார்.

