கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் விசாரணை முடிவடையும் ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கு 3 மாதத்தில் விசாரணை முடிவடையும் ஐகோர்ட்டில் சி.பி.ஐ., தகவல்
ADDED : ஏப் 16, 2025 12:25 AM
சென்னை:'கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரண வழக்கின் புலன் விசாரணை, மூன்று மாதங்களில் முடிக்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், சி.பி.ஐ., தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம், மாதவச்சேரி, சங்கராபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்து, 60க்கு மேற்பட்டோர் பலியாகினர்.
கடந்தாண்டு ஜூன், 19ல் இச்சம்பவம் நடந்தது. இதில், தொடர்புடைய, 20க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டனர்.
தற்போது, வழக்கை சி.பி.ஐ., விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கன்னுக்குட்டி, தாமோதரன் ஆகியோர் ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, நீதிபதி சுந்தர் மோகன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.ஐ., தரப்பில், 'கள்ளச்சாராயம் தொடர்பான வழக்கு விசாரணை, மூன்று மாதங்களில் முடிக்கப்படும்.
'வழக்கில் முக்கிய குற்றவாளியான தாமோதரன், கன்னுக்குட்டிக்கு ஜாமின் வழங்கக் கூடாது' என்று, தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் தரப்பில், 'கடந்த, 10 மாதங்களுக்கு மேலாக சிறையில் உள்ளனர். நீதிமன்றம் விதிக்கக்கூடிய நிபந்தனைகளை ஏற்க தயாராக உள்ளோம். எனவே, ஜாமின் வழங்க வேண்டும்' என தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, வழக்கில் எத்தனை பேர் விசாரணையில் உள்ளனர் என்பது தொடர்பாக பதிலளிக்க, சி.பி.ஐ., தரப்புக்கு உத்தரவிட்டு, விசாரணையை வரும், 17ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

