சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: த.வெ.க., தலைவர் விஜய் கருத்து
சி.பி.ஐ., விசாரணை தேவையில்லை: த.வெ.க., தலைவர் விஜய் கருத்து
ADDED : ஜன 27, 2025 01:37 AM

சென்னை: 'வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி., விசாரித்து, காலதாமதமாக அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், அது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும்' என, தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை:
ஒரு விசாரணையின் முடிவுகள் கேள்விக்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அதை மறு விசாரணைக்கு உட்படுத்துவதில், எந்த தவறும் இல்லை.
வேங்கைவயல் விவகாரத்தில், குற்றம் செய்தவர்கள் எனக் குறிப்பிடப்படுபவர்கள் குறித்து, பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளன. எனவே, குறை காணவே இயலாத, நடுநிலையான பார்வையுடன், இந்த விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு, தண்டிக்கப்பட வேண்டும்.
பாதிக்கப்பட்டோருக்கு உரிய நீதி வழங்க வேண்டும். இதன் வாயிலாக மக்களுக்கும், சரியான நீதி வழங்கப்பட்டது என்ற நம்பிக்கை ஏற்பட வேண்டும்.
மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சி.பி.சி.ஐ.டி., ஏற்கனவே விசாரணை நடத்தி, காலதாமதமாக விசாரணை அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
மத்திய அரசின் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட்டால், அது மேலும் காலதாமதத்தை ஏற்படுத்தும். இது வேங்கைவயலில், மக்களுக்கு விரைவாக நீதியை பெற்று தராது.
வேங்கைவயல் விவகாரத்தில், உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். வரும் காலங்களில், இது போன்ற ஒரு கொடுஞ்செயல் நிகழாத வகையில், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கடும் கண்டனத்திற்குரிய மனிதத் தன்மையற்ற செயலான, வேங்கை வயல் விவகாரத்தில், உயிர்நீதிமன்றத்தின் நேரடி கண்காணிப்பில், சிறப்பு புலனாய்வு குழு நியமித்து, விசாரணை நடத்தி, உண்மையான குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

