போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் சி.பி.ஐ.,யின் அறிக்கை நிராகரிப்பு
போலீஸ் காவலில் அஜித்குமார் மரணம் சி.பி.ஐ.,யின் அறிக்கை நிராகரிப்பு
ADDED : செப் 02, 2025 05:49 AM
மதுரை : சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ., தாக்கல் செய்த இறுதி அறிக்கையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு திருப்பி அனுப்பியது மதுரை நீதிமன்றம்.
மடப்புரம் கோயிலுக்கு பேராசிரியை நிகிதா காரில் வந்தார். காரிலிருந்த நகை திருடுபோனது. அவர் திருப்புவனம் போலீசில் புகார் செய்தார். கோயில் காவலாளியாக இருந்த அஜித்குமாரை ஜூன் 27ல் போலீசார் விசாரித்தனர்.
போலீசார் தாக்கியதில் அவர் இறந்தார். இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.,க்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குகள் தாக்கலாகின.
ஜூலை 8ல் விசாரணையின்போது தமிழக அரசு தரப்பில், 'வழக்கு விசாரணை சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது' என தெரிவித்தது. அப்போது இரு நீதிபதிகள் அமர்வு, 'நகை திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகாரையும் சேர்த்து சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும்.
சி.பி.ஐ.,விசாரணை அதிகாரி ஆக.20 க்குள் கீழமை நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
ஆக.20ல் விசாரணையின்போது சி.பி.ஐ.,தரப்பு வழக்கறிஞர் முகைதீன் பாஷா,' போலீஸ் காவலில் மரணமடைந்த வழக்கில் சி.பி.ஐ.,விசாரணையை முடித்து மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆக.20 ல் ஆன்லைன் மூலம் முதற்கட்ட இறுதி அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
இவ்வழக்கில் ஏற்கனவே 5 போலீசார் கைதாகியுள்ளனர்.
போலீஸ் வேன் டிரைவர் ராமச்சந்திரன் 6 வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார்' என்றார்.நீதிபதிகள், 'சி.பி.ஐ.,விசாரணை அதிகாரி டி.எஸ்.பி. மோஹித்குமார் மற்றும் அவரது குழுவிலுள்ள அதிகாரிகளை இந்நீதிமன்றம் பாராட்டுகிறது. நகை திருட்டு வழக்கில் விசாரணையை துவக்கி இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டனர்.
இந்நிலையில் முதற்கட்ட இறுதி அறிக்கையில் குறைபாடுகளை நிவர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மீண்டும் தாக்கல் செய்யுமாறு திருப்பி அனுப்ப மதுரை தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி செல்வபாண்டி உத்தரவிட்டார்.

