ADDED : ஜன 27, 2026 07:02 AM

சென்னை: 'மாணவர்களின் மன இறுக்கத்தை போக்கி அவர்களுக்கு வழிகாட்ட, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க வேண்டும்' என, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., அதன் உறுப்பு பள்ளிகளுக்கு சமீபத்தில் அனுப்பிய உத்தரவில், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களில், 500 பேருக்கு ஒரு மனநல ஆலோசகரை நியமிக்க உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து, சி.பி.எஸ்.இ., பள்ளி தலைமை ஆசிரியர்கள் கூறியதாவது:
பதின்பருவ குழந்தைகள், சமீபகாலமாக பல்வேறு மனரீதியான சிக்கல்களை சந்திப்பது ஆய்வுகளில் தெரிய வந்துள்ளது. அதற்கு தீர்வு காண, பள்ளிகளில் மனநல ஆலோசகர்களை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதை ஏற்று, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுவாக எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவர்கள், படிப்பு சார்ந்து, பல்வேறு மனநல பிரச்னைகளை சந்திக்கின்றனர்.
அதற்கு முக்கிய காரணமாக, மொபைல் போன்கள், சமூக வலைதளங்கள் உள்ளன. மேலும், இனக்கவர்ச்சி, பாலியல் தொந்தரவு, பாடங்களை புரிந்துகொள்ள இயலாமை உள்ளிட்ட மனம் சார்ந்த பிரச்னைகளாலும், மன இறுக்கத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறான பிரச்னைகளால் பாதிக்கப்படும் மாணவியர், யாரும் எதிர்பாராத வகையில், போதை மாத்திரை, ஊசிக்கு அடிமையாவது, தற்கொலை செய்து கொள்வது உள்ளிட்ட தவறான முடிவுகளை எடுக்கின்றனர்.
அதனால், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க, 500:1 என்ற விகிதத்தில் மனநல ஆலோசகர், மாணவர்களுக்கு உயர்கல்வி, தொழில்கல்வி குறித்து வழிகாட்ட, தொழில் ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என, பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

