'சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்தும் திருமா!' அண்ணாமலை குற்றச்சாட்டும் பதிலும்
'சி.பி.எஸ்.இ., பள்ளி நடத்தும் திருமா!' அண்ணாமலை குற்றச்சாட்டும் பதிலும்
ADDED : பிப் 20, 2025 09:17 PM
'விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் சி.பி.எஸ்.சி., பள்ளியில் நிர்வாகக் குழு தலைவராக இருக்கிறார்' என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்ட, 'அப்படி இல்லை' என, திருமாவளவன் விளக்கம் அளித்திருக்கிறார்.
அண்ணாமலை அறிக்கை:
தி.மு.க., உடன் கூட்டணி வைத்து கொண்டு, தி.மு.க.,வினரை போலவே இரட்டை வேடம் போடுபவர்களின் வரிசையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இருக்க மாட்டார் என்று நினைத்திருந்தேன். ஏமாற்றம் தான் மிஞ்சுகிறது.
சென்னை வேளச்சேரியில், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தில் செயல்படும், 'புளூ ஸ்டார் செகண்டரி ஸ்கூல்' என்ற பள்ளியின் நிர்வாக குழு தலைவராக இருக்கிறார் திருமாவளவன்.
அரசு பள்ளியில் ஏழை மாணவர்களுக்கு மும்மொழி வேண்டாம் என்று கூறுபவர்கள் அனைவருமே, மும்மொழி பயிற்றுவிக்கும் தனியார் பள்ளிகளுடன், ஏதோ ஒரு வகையில் தொடர்பில் இருப்பது ஏன்?
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அதற்கு பதிலளித்து திருமாவளவன் பேட்டி:
அண்ணாமலை கூறுவதுபோல், இரட்டை வேடம் போட வேண்டிய அவசியம் எனக்கில்லை. எங்களது இடத்தில், இதற்கு முன் ஒரு நிறுவனம் பள்ளி நடத்தியது. தற்போது, மற்றொரு நிறுவனம் நடத்துவதற்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளனர். இடம் எங்களுடையது என்பதால், என் பெயரை பயன்படுத்தியுள்ளனர். அதில், ஒரு மாணவர் கூட இன்னும் சேரவில்லை. அப்பள்ளியும் செயல்பாட்டுக்கு வரவில்லை.
அண்ணாமலை பரபரப்புக்காக பேசி, நாகரிக அணுகுமுறையை தவிர்த்து விட்டு, யாரையும், எப்படியும் விமர்சிக்கலாம் என நினைக்கிறார். எனக்கு ஹிந்தி மீது வெறுப்பு இல்லை. நான் பன்மொழி கொள்கையை ஆதரிப்பவன்.
இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-

