மதுரை- தூத்துக்குடி ரயில்பாதை விவகாரம்: மத்திய அரசு பல்டி
மதுரை- தூத்துக்குடி ரயில்பாதை விவகாரம்: மத்திய அரசு பல்டி
UPDATED : ஜன 15, 2025 11:32 PM
ADDED : ஜன 15, 2025 11:30 PM

சென்னை : மதுரை - துாத்துக்குடி அகல ரயில் பாதை விவகாரத்தில், மத்திய அரசு பல்டி அடித்துள்ளது. 'இந்த ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துதல் தொடர்பாக, தமிழக அரசுடன் எந்த பிரச்னையும் இல்லை' என, தெற்கு ரயில்வே வாயிலாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக, தமிழக அரசு பற்றி தவறாக சொன்னதாக ஒப்புல் அளித்துள்ளார்.
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்., ரயில் பெட்டி தொழிற்சாலையில், கடந்த 10ம் தேதி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, மதுரை -- துாத்துக்குடி அகல ரயில் பாதை அமைக்கும் திட்டத்தை கைவிடும்படி, தமிழக அரசு கோரியுள்ளதாக தெரிவித்தார்.
இது, தமிழக மக்களிடம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. ரயில்வே திட்டத்துக்கு தமிழக அரசு ஒத்துழைக்கவில்லை என்ற விமர்சனங்களும் எழுந்தன.
போராட்டம்
ஆனால், 'திட்டத்தை கைவிடும்படி, மாநில அரசு ஒருபோதும் கூறவில்லை' என, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழக அரசைக் கண்டித்து, எதிர்க்கட்சிகள் தரப்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்ட அறிக்கை:
சென்னை பெரம்பூர் ஐ.சி.எப்.,பில், கடந்த 10ம் தேதி மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேட்டி அளித்தார்.
அப்போது, தமிழக ரயில்வே திட்டங்கள் குறித்து, செய்தியாளர்கள் ஒரே நேரத்தில் பல கேள்விகள் கேட்டனர். ரயில்வே பணிமனையில் இரைச்சல் அதிகமாக இருந்தது. அப்போது, மதுரை -- துாத்துக்குடி ரயில் பாதை திட்டம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது.
அதிக இரைச்சல் காரணமாக, அந்தக் கேள்வியை, தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்கும் திட்டம் தொடர்பானது என்று எண்ணிய அமைச்சர், அதற்கான பதிலை கூறினார். நிலம் ஒதுக்கீடு, சுற்றுச்சூழல் பிரச்னையால் கைவிடலாம் என, மாநில அரசு எழுத்துப்பூர்வமாக கேட்டுக்கொண்டதாக கூறியிருந்தார்.
அமைச்சர் அளித்த பதிலை கேள்வி கேட்ட செய்தியாளர்கள், மதுரை- - துாத்துக்குடி திட்டத்தை கைவிடுவதாக எடுத்துக் கொண்டனர்.
பிரச்னை இல்லை
மதுரை- - துாத்துக்குடி ரயில் பாதை அமைக்கும் திட்டத்தில், நிலம் கையகப்படுத்துவது தொடர்பாக, மாநில அரசால் எந்த பிரச்னையும் இல்லை என, தற்போது மத்திய அமைச்சர் தெளிவுபடுத்தி உள்ளார்.
மாநில அரசு கைவிடும்படி கேட்டுக்கொண்டது, தனுஷ்கோடி திட்டத்தையே.
தொழிற்சாலையில் எழுந்த இரைச்சல் காரணமாகவும், தேசிய அளவிலான ரயில்வே திட்டங்கள் குறித்து, ஒரே நேரத்தில் மாநில, தேசிய ஊடகங்களைச் சேர்ந்த செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதாலும், தகவல் தொடர்பில் பிழை ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.