சர்வதேச கண்காட்சிகளில் மாம்பழ கூழ் தமிழகத்திலிருந்து அனுப்ப மத்திய அரசு உதவி
சர்வதேச கண்காட்சிகளில் மாம்பழ கூழ் தமிழகத்திலிருந்து அனுப்ப மத்திய அரசு உதவி
ADDED : ஜூலை 23, 2025 12:10 AM
சென்னை:தமிழகத்தில் தேக்கம் அடைந்துள்ள மாம்பழ கூழை வெளிநாடுகளில் விற்க, 'அபெடா' எனப்படும், மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம், உதவி செய்ய முன்வந்துள்ளது.
தமிழகத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி உட்பட பல்வேறு மாவட்டங்களில், 3.60 லட்சம் ஏக்கரில், மாமரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இவற்றில் ஆண்டுதோறும், 10 லட்சம் டன் மாம்பழம் உற்பத்தியாகிறது.
நடப் பாண்டு மாம்பழ உற்பத்தி இரண்டு மடங்கு அதிகரித்தது. இதனால், உற்பத்தியான மாம்பழங்களை விற்க முடியவில்லை.
பல்வேறு மாவட்டங்களில் உள்ள மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலைகளில், மாம்பழம் கொள்முதல் நிறுத்தப்பட்டது.
இதுகுறித்து, மாம்பழ கூழ் தயாரிப்பு ஆலை நிர்வாகத்தினருடன், தோட்டக்கலை மற்றும் வேளாண் துறை உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அப்போது, 'மூன்று ஆண்டுகளாக மாம்பழ கூழ் தேக்கம் அடைந்துள்ளதால், அவற்றை கொள்முதல் செய்ய முடியாது' என, ஆலை நிர்வாகங்கள் தெரிவித்தன.
மாம்பழ கூழ் விற்பனைக்கு உதவுவதாக, வேளாண் துறை தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதை ஏற்று, மாம்பழ கூழ் தயாரிப்பை, ஆலைகளின் நிர்வாகிகள் மீண்டும் துவக்கினர்.
அதைத் தொடர்ந்து, ஆலைகளில் தேக்கம் அடைந்துள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வேளாண் துறை செயலர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
ஆலைகளில் தேங்கியுள்ள மாம்பழ கூழை விற்க, மத்திய அரசின் உதவியை நாடினோம். மத்திய வேளாண் மற்றும் உணவு பதப்படுத்துதல் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணைய தலைவருடன், இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்தினோம்.
அதைத் தொடர்ந்து, தமிழகத்தில் தேங்கியுள்ள மாம்பழ கூழை, வெளிநாடுகளில் விற்க உதவி செய்ய முன்வந்துள்ளனர்.
இதற்காக, ரஷ்யா மற்றும் ஜெர்மனி நாடுகளில் நடக்க உள்ள சர்வதேச கண்காட்சியில் இந்திய அரங்கில், மாம்பழ கூழை சந்தைப்படுத்த ஆலோசனை வழங்கி உள்ளனர். மேலும், அங்குள்ள நிறுவனங்களுடன் பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு கூறினார்.