டெண்டர் ஒதுக்க லஞ்சம் பெற்ற புகார் மத்திய அரசு அதிகாரிகள் விடுதலை
டெண்டர் ஒதுக்க லஞ்சம் பெற்ற புகார் மத்திய அரசு அதிகாரிகள் விடுதலை
ADDED : நவ 09, 2025 02:20 AM
சென்னை: 'டெண்டர்' ஒதுக்கீட்டுக்கு, 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சி.பி.ஐ., தொடர்ந்த வழக்கில், சென்னை உர நிறுவன முன்னாள் தலைவர், நிர்வாக இயக்குநர் மற்றும் பொது மேலாளரை விடுதலை செய்து, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மணலியில், மத்திய உரத்துறைக்கு சொந்தமான எம்.எப்.எல்., எனும் மெட்ராஸ் உர நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்துக்கு, நான்கு, 'கம்ப்ரசர்கள்' கொள்முதல் செய்ய, 'டெண்டர்' கோரப்பட்டது.
வழக்குப்பதிவு பின், எந்தக் காரணமும் இன்றி, டெண்டரை ரத்து செய்து, மறு டெண்டர் கோரப்பட்டு, 'போஜ்' என்ற நிறுவனத்துக்கு, அதிக விலைக்கு டெண்டர் வழங்கப்பட்டது.
இதற்காக, ஒரு கோடி ரூபாய் லஞ்சம் பேசப்பட்டு, 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக, 2012ல் சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்தது.
சென்னை உர நிறுவனத்தின் முன்னாள் தலைவரும், நிர்வாக இயக்குநருமான விஜயகுமார், பொது மேலாளர் சுந்தரசேகரன், 'போஜ்' நிறுவனம் மற்றும் அதன் வினியோக நிறுவனமான பி.ஐ., நிறுவனத்துக்கு எதிரான வழக்கை, சென்னை சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஈஸ்வரனே விசாரித்தார்.
இழப்பு இல்லை இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, 'போஜ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டெண்டர் ரத்து செய்யப்பட்டு உள்ளது. எந்த பணமும், அந்த நிறுவனத்துக்கு வழங்கப்படவில்லை என்பதால், அரசுக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.
'மேலும், 26 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. குற்றச்சாட்டுக்களை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க, சி.பி.ஐ., தவறி விட்டது' எனக்கூறி, குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

