மரக்கிளை விழுந்ததால் பலியானவருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க உத்தரவு
மரக்கிளை விழுந்ததால் பலியானவருக்கு மத்திய அரசு இழப்பீடு வழங்க உத்தரவு
ADDED : நவ 24, 2024 02:01 AM
மதுரை,:கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் மரக்கிளை முறிந்து விழுந்து, டிரைவர் பலியானதற்கு மத்திய அரசு, 17 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
அகஸ்தீஸ்வரம் அருகே கன்னிவிநாயகபுரம் நீலாவதி, செல்வமணி ஆகியோர் தாக்கல் செய்த மனு:
எங்கள் மகன் வாசன், 27, தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்தார். கன்னியாகுமரி - நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலையில் பொற்றையடியில் இருந்து கன்னியாகுமரி நோக்கி கற்கள் ஏற்றிய வாகனத்தை 2011ல் ஓட்டிச் சென்றார். சாலை அருகே இருந்த மரத்தின் பெரிய கிளை முறிந்து, வாகன கூரையில் விழுந்தது. மகனின் தலையில் காயம் ஏற்பட்டது.
நாஞ்சில்நாடு புத்தனாறு கால்வாயில் வாகனம் கவிழ்ந்தது; மகன் இறந்து போனார். எங்களுக்கு 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரி, அத்துறைகளுக்கு மனு அனுப்பினோம். இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டனர்.
உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.கே.இளந்திரையன் வழக்கை விசாரித்து, ''மரங்களை முறையாக பராமரிக்காமல், பழைய மரங்களை அகற்றத் தவறியதால் தான் விபத்து ஏற்பட்டது. எனவே, மத்திய சாலை போக்குவரத்து துறை மற்றும் என்.எச்.ஏ.ஐ., கவனக்குறைவாக செயல்பட்டுள்ளன. அத்துறைகள் மனுதாரர்களுக்கு, 17 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்,'' என, நேற்று உத்தரவிட்டார்.