பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு கடலுாரில் மத்திய குழு ஆய்வு
பெஞ்சல் புயல் வெள்ள பாதிப்பு கடலுாரில் மத்திய குழு ஆய்வு
ADDED : டிச 09, 2024 06:46 AM

கடலுார், கடலுார் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக மழை மற்றும் வெள்ள பாதிப்பு பகுதிகளில், உள்துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான மத்திய குழுவினர் ஆய்வு செய்தனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட பகண்டை மற்றும் மேல்பட்டாம்பாக்கத்தில் தென்பெண்ணை ஆற்றங்கரை உடைப்பு ஏற்பட்டு விளை நிலங்கள் பாதிப்பு, கஸ்டம்ஸ் சாலையில் மண் அரிப்பு, அழகியநத்தம் இரண்டாயிரம் விளாகம் சாலையில் தரைப்பாலம் துண்டிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டனர்.
அழகியநத்தத்தில் வேளாண் பயிர், வாழை மரங்கள் சேதத்தை பார்வையிட்ட மத்திய குழுவினர், விவசாயிகளிடம் பயிர்சேதம் குறித்து கேட்டறிந்தனர்.
நாணமேட்டில் தென்பெண்ணையாற்று கரை பகுதி உடைப்பு ஏற்பட்டு விளைநிலங்களுக்குள் மழைவெள்ளம் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது, நிலப்பரப்பில் மணல் குவியல் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டனர்.
குண்டு உப்பலவாடியில் சேதமடைந்த வீடுகள், கண்டக்காட்டில் பாலத்தின் பக்கவாட்டு சுவர்கள் சேதமடைந்துள்ளதை பார்வையிட்டனர்.
விவசாய நிலப்பரப்பில் மணல் குவியல் ஏற்பட்டுள்ளதை பார்வையிட்டனர். பாதிப்பு தொடர்பாக, விளக்க படக்காட்சியை பார்வையிட்டு அதிகாரிகளிடம் விவரம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மழைவெள்ள பாதிப்பு பகுதிகள், சேதங்கள், மீட்பு நடவடிக்கைகள், நிவாரணப்பொருட்கள் வழங்கிய விவரங்கள் வீடியோ பதிவுகளாக மத்திய குழுவினருக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.
ஆய்வு கூட்டத்தில், சிறப்பு கண்காணிப்பு அலுவலர், ககன்திப்சிங் பேடி, வருவாய் நிர்வாக ஆணையர் ராஜேஷ் லக்கானி, அரசு முதன்மை செயலர் அமுதா, மின்பகிர்மானக் கழக தலைவர் நந்தகுமார், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மோகன், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் மற்றும் அதிகாரிகள் இடம் பங்கேற்றனர்.