'மறுமணம் செய்யவில்லை' சான்றிதழ்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அவதி
'மறுமணம் செய்யவில்லை' சான்றிதழ்: போக்குவரத்து ஓய்வூதியர்கள் அவதி
ADDED : பிப் 11, 2025 07:03 AM

விருதுநகர்; குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களில், 60 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆண்டுதோறும் மறுமணம் செய்யவில்லை என்ற சான்றிதழை வி.ஏ.ஓ., விடம் பெற்று, ஆயுள் சான்றிதழ் புதுப்பித்தலின் போது வழங்க வேண்டும் என, அரசு போக்குவரத்துக்கழகம் வற்புறுத்துவது அவதியை ஏற்படுத்தியுள்ளது.
போக்குவரத்து கழகங்களில் பணிபுரிந்து ஓய்வூதியம் பெறுபவர்கள், வாரிசுதாரர்கள் ஆண்டுதோறும் ஆயுள் சான்றிதழ் புதுப்பிக்க வேண்டும். இதற்கு அந்தந்த மாவட்ட அரசு போக்குவரத்து கழக தலைமையங்களில், ஜனவரி, 1 முதல், 31 வரை அவகாசம் வழங்கப்படுகிறது. 60 வயதுக்கு உட்பட்ட ஓய்வூதியரின் மனைவியான வாரிசுதாரர் மறுமணம் செய்யவில்லை என, வி.ஏ.ஓ.,விடம் பெற்ற சான்றிதழ் சமர்பிக்க வேண்டும்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் மனைவியான வாரிசுதாரர் பெறும் குடும்ப ஓய்வூதியத்தில், ஆயுள் சான்றிதழ் புதுப்பிக்கும் போது, வி.ஏ.ஓ., சான்றிதழ் தேவையில்லை. ஆன்லைனில் சுய சான்றிதழ் பதிவிட்டால் போதும். ஆனால், அரசு போக்குவரத்து துறையில் மட்டும் ஆண்டுதோறும் மறுமணம் செய்யவில்லை என்ற, வி.ஏ.ஓ., சான்றிதழ் சமர்ப்பிக்க கட்டாயப்படுத்தப்படுகிறது. இதனால், பலரும் மனஉளைச் சலுக்கு ஆளாகியுள்ளனர்.
மற்ற அரசு துறை ஓய்வூதிய வாரிசுகளுக்கு வழங்கப்படுவதை போல, அரசு போக்குவரத்து துறையிலும் சுயசான்று வழங்கும் நடைமுறையை கொண்டு வர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

