ADDED : அக் 22, 2024 10:09 PM
சென்னை:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் வெளியிட்ட அறிக்கை:
மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலையில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது.
இது, நாளை இரவு அல்லது நாளை மறுநாள் அதிகாலையில், ஒடிசா - மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில், புரி - சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தின் தென்மாவட்டங்களின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாகக் காணப்படும், ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.