ADDED : அக் 23, 2024 05:01 AM

சென்னை : வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் இன்று, 11 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: மத்திய கிழக்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை காலையில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது. இது, நாளை இரவு அல்லது நாளை மறுநாள் அதிகாலையில், ஒடிசா - மேற்கு வங்கம் கடற்கரை பகுதியில், புரி - சாகர் தீவுகள் இடையே கரையை கடக்கக்கூடும்.
இந்நிலையில், தமிழகத்தின் தென் மாவட்டங்களின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரியில் இன்று இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்துார் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் கனமழை பெய்யலாம்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.