ADDED : ஆக 15, 2025 12:37 AM
சென்னை:'வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு ஆந்திரா - தெற்கு ஒடிஷா இடையே இன்று கரையை கடக்கக்கூடும்; அதே நேரத்தில், தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
அதன் அறிக்கை:
தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லார் பகுதியில் 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, கோவை மாவட்டம் சோலையார், சின்கோனா பகுதிகளில் தலா 4; கோவை மாவட்டம், வால்பாறை, பொள்ளாச்சி, உபாசி, நீலகிரி மாவட்டம், நடுவட்டம், பார்வூட் ஆகிய இடங்களில் தலா 3 செ.மீ., மழை பெய்துள்ளது.
நேற்று முன்தினம், மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று காலை நிலவரப்படி, வடக்கு ஆந்திரா மற்றும் தெற்கு ஒடிஷா கடலோர பகுதிகளில் நிலவியது. இன்று, ஆந்திரா - ஒடிஷா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தில் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஆக., 20 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும்; சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் இன்று மணிக்கு, 40 முதல் 50 கி.மீ., வரை, இடையிடையே மணிக்கு 60 கி.மீ., வேகத்தில் சூறாவளிக்காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.