தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
தென் தமிழக கடலோரப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்
ADDED : பிப் 25, 2024 01:27 PM

சென்னை: 'தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென் தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று(பிப்.,25) மழைக்கு வாய்ப்புள்ளது' என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்னிந்தியப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தென்தமிழக கடலோரப்பகுதிகளில் இன்று(பிப்.,25) ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் பிப்.,26,27 ஆகிய தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் பிப்.,28ம் தேதி முதல் மார்ச் 02ம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும்.
தமிழகத்தில் ஒருசில இடங்களில் இன்றும், நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.