ADDED : பிப் 02, 2025 06:44 AM

சென்னை: 'தென் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் நேற்று முன்தினம் நிலவரப்படி, திருநெல்வேலி மாவட்டம் ஊத்து, நாலுமுக்கு, சேரன்மகாதேவி, தென்காசி மாவட்டம் அணை பிரிவு உள்ளிட்ட பகுதிகளில், தலா 1 செ.மீ., மழை பெய்துள்ளது.
தென் மாவட்டங்களில், இன்று ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். வட மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில், வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் காலை வேளையில் லேசான பனிமூட்டம் காணப்படும். மேலும், நாளை முதல் 7ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். காலை நேரத்தில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.