கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்
கண்டதேவி சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம்
ADDED : பிப் 12, 2024 06:13 AM

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், கண்டதேவியில் உள்ள சொர்ணமூர்த்தீஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் நேற்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்தது.
இக்கோயில் தென்னிலை, உஞ்சனை, செம்பொன்மாரி, இறகுசேரி நாடுகள் எனும் பகுதிகளுக்கு கீழ் உள்ள 170 கிராம மக்களுக்கான தலைமை கோயில் ஆகும்.
இங்கு ஆனி திருவிழா விமரிசையாக நடக்கும். தேர் வடம் பிடிப்பதில் ஜாதி பிரச்னை எழுந்ததால் 2006 க்கு பின் தேரோட்டம் நடக்கவில்லை. கோயில் கும்பாபிேஷகம், தேர்பழுது காரணத்தால் தேரோட்டம் நிறுத்தப்பட்டன.
கடந்த 4 ஆண்டுக்கு முன் புதிதாக பெரிய தேர் செய்யப்பட்டது. அதன்பின்னரும் தேரோட்டம் நடக்கவில்லை. இதனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி உரிய பாதுகாப்புட-ன் தேர் வெள்ளோட்டம் நடத்த உத்தரவிட்டார்.
கலெக்டர் ஆஷா அஜித், எஸ்.பி., அர்விந்த், தேவஸ்தான அறங்காவலர் ராணி மதுராந்தகி நாச்சியார் தலைமையில் அனைத்து தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தி ஜன.,21ல் வெள்ளோட்டம் நடத்த முடிவு செய்தனர். பின்னர் இந்நிகழ்ச்சியை பிப்., 11க்கு மாற்றம் செய்தனர். முற்றிலும் தேவஸ்தான ஊழியர்களை வைத்தே தேர் வடம் பிடித்து இழுக்க செய்வதென முடிவு செய்யப்பட்டது.
முகூர்த்தகால் நடுதல்
அதன்படி, நேற்று முன்தினம் இரவு பூஜை செய்து தேரில் முகூர்த்த கால் நடப்பட்டது. நேற்று அதிகாலை 4:00 மணிக்கு தேருக்கு சிறப்பு அபிேஷகம் செய்தனர். அலங்கரிக்கப்பட்ட தேரின் வெள்ளோட்டம் நேற்று காலை 6:35 மணிக்கு புறப்பட்டு, நான்கு ரத வீதிகளை சுற்றி வந்து காலை 7:50 மணிக்கு நிலையை அடைந்தது. 17 ஆண்டிற்கு பின் தேர் வெள்ளோட்டம் நடந்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ராமநாதபுரம் டி.ஐ.ஜி., துரை, சிவகங்கை எஸ்.பி., அர்விந்த், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை பங்கேற்றனர். பாதுகாப்பில் 1,400 போலீசார் ஈடுபட்டனர்.
இக்கோயிலில் ஆனித்திருவிழாவின்போது ஜூன் 21ல் தேரோட்டம் நடக்க உள்ளது.