ADDED : டிச 24, 2024 10:24 PM
மதுரை:சென்னையை சேர்ந்தவர் யூ டியூபர் சவுக்கு சங்கர். தேனி பூதிப்புரத்தில் ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தபோது, காரில் கஞ்சா வைத்திருந்ததாக அவர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்கு பதிந்தனர்.
கைதான அவருக்கு, மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு முதன்மை சிறப்பு நீதிமன்றம், ஏற்கனவே ஜாமின் அனுமதித்தது. அங்கு அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. அவருக்கு எதிராக அந்நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.
அவரை போலீசார் கைது செய்து, சில தினங்களுக்கு முன் அந்நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்; ஜாமின் மனு தாக்கல் செய்தார்.
நீதிபதி செங்கமல செல்வன் பிறப்பித்த உத்தரவு:
ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. சென்னை வேப்பேரி சைபர் கிரைம் போலீசில், 15 நாட்கள் ஆஜராகி கையெழுத்திட வேண்டும். பின், மதுரை போதைப் பொருள் தடுப்பு வழக்கு மதுரை இரண்டாவது கூடுதல் சிறப்பு நீதிமன்றத்தில் தவறாமல் விசாரணைக்கு ஆஜராக வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.

