ADDED : மார் 21, 2024 02:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேலுார்:வேலுார் மாவட்டம், டி.பி.கிருஷ்ணசாமி நகர் கள்ளுக்கடை சந்து பகுதியில், தி.மு.க., மாநகர் மாவட்ட பொருளாளரும், மாவட்ட ஹிந்து சமய அறநிலையத்துறை தலைவருமான அசோகன் என்பவரது அலுவலகம் உள்ளது. அங்கு, நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு வருமான வரித்துறையினர் வந்தனர். அவர்கள் திடீரென அலுவலக அறைக்குள் சென்று சோதனையில் ஈடுபட்டனர். பின், அலுவலகத்தின் ஷட்டர் மூடப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். வெளியாட்கள் யாரும் உள்ளே அனுமதிக்கவில்லை.
அன்றிரவு, 10:00 மணி வரை சோதனை செய்தனர். அங்கிருந்த கம்ப்யூட்டரில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்து சென்றனர். ஆய்வில் ஈடுபட்ட அதிகாரிகளிடம், நிருபர்கள் விசாரித்தபோது, எந்த விபரங்களையும் கூறாமல் சென்று விட்டனர்.

