UPDATED : பிப் 03, 2024 04:32 PM
ADDED : பிப் 03, 2024 02:24 AM
நம்ம கிரிக்கெட் ஸ்டார், 'கூல் கேப்டன்' என, அழைக்கப்படும் 'தல' தோனி, திருப்பூரில் இருந்து பெல்ஜியன் ஷெப்பர்ட் வாங்கியிருக்கிறார். இதை தோனிக்கு வழங்கிய 'நாய்கொட்டில்' நிறுவனர் சதீஷ், இந்த பிரீடின் ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
''பொதுவா நன்றியுள்ள ஜீவன் என்ற அடைமொழி நாய்களுக்கு உண்டு. ஒவ்வொரு பிரீடுக்கும் வெவ்வேறு குணாதிசயம் கூடுதலாக இருக்கும். 'காவலுக்கு கெட்டிக்காரன்' என்பது தான் பெல்ஜியன் ஷெப்பர்டோட அடைமொழி. ஷெப்பர்டு வகை நாய்கள், ராணுவம், காவல்துறையில் துப்பறியும் பணிக்கு அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது.
அதிக உயரத்தில் குதிக்கும் இவ்வகை நாய்கள் போர்க்குணம் கொண்டிருந்தாலும் அமைதியாக, பிறரோடு எளிதில் பழகும் பண்பையும் பெற்றிருக்கின்றன. இதனால் இதற்கு தரப்படும் பயிற்சியை பொறுத்து பண்புகளை மாற்றி கொள்ளும். வீடுகளில் பாதுகாப்பிற்காக, ஷெப்பர்டு வகை நாய்களையே அதிகம் வளர்க்கின்றனர். குழந்தைகளை யாராவது தாக்க முன்வந்தால் உடனே சுதாரித்து கொண்டு, எதிராளியை தாக்கிவிடும். தோனியின் செல்லமகள் ஜிவாசிங்குக்காகவே, பிறந்து 100 நாள் ஆன 'பெல்ஜியன் ஷெப்பர்டு' வாங்கியிருக்கலாம்'' என்கிறார், சதீஷ்.
அம்மாடியோவ்! இவன் என்னோட 'பாடி காட்'
'என்னை பார்த்தாலே ஒருவித பரவசத்துடன் பாய்ந்தோடி வருவான் குண்டாஸ். பேசத்தெரியாவிட்டாலும் அன்பிற்குரியவர்களை கண்டதும் ஆரவாரம் செய்வதும், ஆர்ப்பரிப்பதும் வாயில்லா ஜீவன்களின் தனி சிறப்பு. அவற்றின் வாஞ்சையான சேட்டைகளை ரசிப்பதிலும் ஒரு அலாதி பிரியம் இருக்கிறதே அப்பப்பா' என்கிறார், கிடா வளர்ப்பில் பட்டையைக் கிளப்பும் 14 வயது பத்தாம் வகுப்பு மாணவி கனிஷ்கா.
இவர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சூளேஸ்வரன்பட்டியைச் சேர்ந்தவர். தந்தை ரங்கராஜ், காய்கறி வியாபாரி. 'மயிலாம்பாடியில் இருந்து, 45 நாள் குட்டியாக வாங்கி வந்த கிடாவை செல்லமாக வளர்த்து வருகிறேன். பார்க்கவே மிரட்டலான கொம்புகளுடன், சண்டைக்கு வர்றையா என்பது போன்றிருக்கும் இவனது பெயர்தான் குண்டாஸ். ரெண்டு வயசுதான் ஆகிறது. நல்லா தீவனம் சாப்பிடுவான். அதனால 'குண்டாஸ்'னு பெயர் வச்சேன். 'பிகில்' வெளியானபோது நான் வாங்கின வேறு ஒரு கிடாவுக்கு 'பிகில்'னு பேரு வச்சேன். அவன் ரொம்பவே டென்ஷன்பார்ட்டி; யாரையும் கிட்டவே விடமாட்டான். இந்த குண்டாஸ் அப்படியில்லை; பாசக்காரன்.
என் குரல் கேட்டாலே ஓடி வந்துவிடுவான்; என் கூடவே நடப்பான்; எதுவும் பண்ண மாட்டேன். அவனுக்கு, நீச்சல் உள்ளிட்ட பயிற்சி கொடுத்துள்ளேன். அவன் தான் என் பெஸ்ட் ப்ரண்ட். விடுமுறை நாளில், நான் மொபைல்போனை தொடவே மாட்டேன். குண்டாஸ் கூட தான் விளையாடி பொழுதை கழிப்பேன். இவன்முன்னாடி யாராவது என்னை தொந்தரவு செய்தால் அவ்வளவுதான், பாய்ந்து வந்து முட்டிய பேத்துருவான். என்னோட 'பாடிகாட்'னு கூட சொல்வேன்' என, கெத்தாக சொன்னார் கனிஷ்கா.
ஆஹா, நல்லா பார்த்துக்கோங்க மக்களே; இவங்க வூட்டுப்பக்கம் போனா, மூட்டு இருக்காதுபோல...!
இதெல்லாமா பார்க்கணும்? ஜர்க் ஆயிடாதீங்க
புஸூ, புஸூ ரோமம், கியூட்டான கண்கள், பஞ்சுபோன்ற பிஞ்சு கால்களுடன் கொஞ்சி விளையாடும் பூனைக்குட்டியை வளர்க்க விரும்புவோருக்கு 'ஹேப்பி பார்ம்ஸ்' நிறுவனர் ரமேஷ்சின் டிப்ஸ் இதோ: பூனை உள்ளிட்ட எந்த செல்லபிராணியாக இருந்தாலும், 'கென்னல் கிளப் ஆப் இந்தியா' அங்கீகாரம் பெற்ற, 'பெட் கிளப்'களில் வாங்குவதே சிறந்தது. செல்லபிராணியின், மூன்று தலைமுறை விபரங்களுடன் சான்றிதழ் கிடைக்கிறது.
பெட் விபரங்கள் அடங்கிய 'சிப்' வழங்குகின்றனர். அவற்றின் பேரன்ட்ஸ், ஏஜ், போட வேண்டிய தடுப்பூசி விவரங்களும் இருக்கும். பிரீடர்களிடம் வாங்கினாலும், செல்லபிராணியின் பெற்றோர் விபரங்கள் அறியலாம்.
இடைத்தரகர்களை நம்பி வாங்க கூடாது. ஒரிஜினல் பிரீட் தான் தருகிறார்களா என்பதற்கு உத்திரவாதம் இருக்காது.
கேட் பொறுத்தவரை பிறந்து இருமாதங்களுக்கு பின் வாங்கலாம். ஓனரிடம் நெருக்கமாகும்.
பெட் வாங்கும் போது எவ்வகையான பிரீட், பேரன்ஸ், ஏஜ், எத்தனையாவது தலைமுறை, சர்ட்டிபிகேட் உள்ளதா என, பார்த்து வாங்க வேண்டும். அதன் பராமரிப்பு முறைகள் குறித்து தெரிந்து கொண்டு வாங்குவதே சிறந்தது.
நேஷ்மாவின் பிரவுனி
மனிதர்கள் மட்டுமா பிறந்த நாளை கொண்டாடுவர். ஐந்தறிவு படைந்த நன்றியுள்ள நாங்களும் அவர்களை விட பிறந்த நாளை அமர்க்களமாக கொண்டாடுவோம் என பேசப்படும் அளவுக்கு மதுரையில் பிறந்த நாளை கொண்டாடியிருக்கிறது பிரவுனி.
மதுரை திருப்பாலையைச் சேர்ந்த மருத்துவம் பயிலும் நேஷ்மாவின் செல்லப்பிராணியான பிரவுனி படு ஸ்மார்ட்டாம். தினமும் நடைபயிற்சி செய்வதுடன் குளித்து குடும்பத்தில் இருக்கும் அனைவரது அறைக்கும் சென்று குட்மார்னிங் வைத்து விட்டு தான் வருமாம். ஓரிரு நாட்களுக்கு முன் பிரவுனி தன் பிறந்தநாளை கேக் வெட்டி ருசித்து ருசித்து கொண்டாடியது.
பிப்.18 கோவையில்
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கும் 'டப்' கொடுக்கும் விதமாக, கோவையும் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. தொழில், வர்த்தகம், கண்காட்சி என ஆண்டு தோறும் பல நிகழ்ச்சிகள் களைகட்டி வருவதே இதற்கு சாட்சி. அந்த வகையில் மும்பை, சென்னையை அடுத்து கோவையிலும், பெட் கார்னிவல் நிகழ்ச்சிகள் அதிகம் நடக்கத் துவங்கியுள்ளன.
வரும் 18ம் தேதி 'கோவை மான்செஸ்டர் கென்னல் கிளப்', சார்பில் டாக் ேஷா மூன்றாம் ஆண்டாக, அவினாசி ரோடு, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடக்கிறது. நம் இல்லத்தில் நம்மில் ஒருவராக வாழ்ந்து கொண்டிருக்கும், ஆத்மார்த்த உறவுச் செல்லப் பிராணிகளுக்கான விழா இது. எல்லா பிரீட் பப்பீஸ், டாக்ஸ் பங்கேற்கலாம். ஸ்டைலாக, வித்தியாசமான ஆக்டிவிட்டிகளுடன், பார்வையாளர்களின் மனதை கவரும் 'டாக்'கிற்கு விருதுகள் காத்திருக்கின்றன.
ேஷா தொடர்பான கூடுதல் தகவலுக்கு, WWW.DOGSNSHOWS.COM என்ற இணையதளம் அல்லது 98430 79767/ 95852 66566 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
உங்க வீட்டு செல்லக்குட்டியோட, ஷோக்கு என்ட்ரீ கொடுத்து கலக்குங்க!
பதட்டமாகாதீர்கள்... முதலுதவி செய்திடுங்கள்
செல்லபிராணிகளுக்கு ஏதாவது அடிபட்டாலோ, வேறு வகையில் பாதிக்கப்பட்டாலோ டாக்டரிடம் அழைத்துச் செல்லும் முன், வளர்ப்போரே சில முதலுதவிகளை செய்திடலாம். நாய், பூனை என எந்த பெட்டாக இருந்தாலும், காயம் ஏற்பட்டால், அதை அப்படியே விட்டுவிட்டால் பாக்டீரியா, வைரஸ் போன்ற கிருமிகளால் நோய் தொற்று ஏற்படும்.
இதை தடுக்க உடனே அந்த இடத்தை, வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம். காயம்பட்ட இடத்தில் ரத்தம் வந்தால், துாய்மையான காட்டன் துணியால் இருநிமிடங்கள் வரை, அழுத்திபிடிக்க வேண்டும். இதன்மூலம், ரத்தம் கசிவது நின்றுவிடும். விபத்தால் எலும்பு முறிதல் உள்ளிட்ட சமயங்களில் அடிபட்ட இடத்தை அசைக்காமல், நகர்த்தாமல், அப்படியே மருத்துவமனைக்கு கொண்டு செல்வது அவசியம்.
பதட்டத்தில் அடிபட்ட இடத்தை நீவிவிடுவது, கட்டு போடுவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், மென்மையான எலும்புகள் கூடுதலாக முறியவும் வாய்ப்புள்ளது. பெட்ஸ்களுக்கான மாஸ்க், மருந்தகங்களில் கிடைக்கிறது. காயத்தை நாக்கால் நக்காமல் இருக்க, இதை அணிவித்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாம்.
சாக்லெட், எலி மருந்து என ஏதாவது விஷத்தன்மை கொண்ட பொருட்களை சாப்பிட்டால், 'ஆக்டிவேட்டட் சார்க்கோல்' எனும் அடுப்புக்கரியை தண்ணீரில் கரைத்து குடிக்க கொடுக்க வேண்டும். முதலுதவி செய்த பிறகு, உடனே கால்நடை மருத்துவரை அணுகுவதே சிறந்த தீர்வாக அமையும்.

