சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்; 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
சென்னை, திருவள்ளூருக்கு இன்று ரெட் அலர்ட்; 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
UPDATED : டிச 01, 2025 06:35 PM
ADDED : டிச 01, 2025 05:37 PM

சென்னை: சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர் கனமழை காரணமாக 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவாகி கடந்த இரு தினங்களாக அச்சுறுத்தி வந்த, டிட்வா புயல் வலுவிழந்தாலும், சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இன்று காலை முதலே இடைவிடாமல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
அம்பத்தூர், ஆவடி, விருகம்பாக்கம் மற்றும் வடபழனி உள்ளிட்ட இடங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளன. மேலும், கிரீன்வேஸ் சாலை உள்பட பல்வேறு இடங்களில் மரங்கள் சரிந்து விழுந்துள்ளன. தீயணைப்பு குழுவினர் மற்றும் மீட்புப்படையினர் அதனை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தொடர் மழையினால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் தேங்கியிருப்பதால் முக்கிய சாலைகள் மற்றும் சுரங்கப்பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதி கனமழைக்கான ரெட் அலர்ட்டை சென்னை வானிலை மையம் பிறப்பித்துள்ளது. இந்த இரு மாவட்டங்களிலும் 20 செ.மீ. மழை பெய்யும். தாழ்வு மண்டலம் மேலும் சென்னையை நோக்கி நகர்ந்து வருவதால் மழை தொடரும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தொடர்மழை பெய்வதால் அருகில் உள்ள மாவட்டங்களில் இருந்து தேசிய பேரிடர் மீட்பு படையினர் பல குழுக்கள் சென்னை விரைந்துள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டில் நாளை (டிச.,02) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

