சென்னை நபர் கடத்தல் பா.ஜ., நிர்வாகி, 4 பேர் கைது
சென்னை நபர் கடத்தல் பா.ஜ., நிர்வாகி, 4 பேர் கைது
ADDED : மார் 06, 2026 06:21 AM
திருப்பூர்: சென்னை, சேத்துப்பட்டை சேர்ந்தவர் ரமேஷ்குமார், 58; ஆன்லைன் வாயிலாக கடன் வாங்கி கொடுத்து வருகிறார். பிப்., 3ல் திருப்பூர் அருகே உள்ள வளர்ப்பு மகளை பார்க்க வந்தார். அவிநாசியில், ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்தவரை, சந்திக்க வந்த சிலர், காரில் கடத்தினர்.
மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு, போனில் ரமேஷ்குமார் தகவல் தெரிவித்தார். அவரை மீட்டு, நல்லுார் போலீசார் விசாரித்தனர்.
அதில், திருப்பூர், பூலுவபட்டி அன்பு, 39, பெருமாநல்லுார் இசக்கி ராஜா, 24, ரஞ்சித்குமார், 28, முத்துக்குமார், 32, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., வர்த்தக அணி செயலர் கணேசன், 42, என, ஐவர் அவரை கடத்தியது தெரிந்தது. இதையடுத்து அவர்களை, போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், கடன் வாங்கி தருவதாக திருப்பூரில், பலரிடமும் ரமேஷ்குமார் பணத்தை வாங்கி, திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியுள்ளார். இந்நிலையில், தன் வளர்ப்பு மகளை பார்க்க, திருப்பூருக்கு அவர் வந்ததை அறிந்த பணம் கொடுத்தவர்கள், அவரை காரில் கடத்தி, செவந்தம்பாளையத்தில் ஒரு கார் பார்க்கிங் வளாக அறையில் அடைத்து வைத்திருந்தது தெரிந்தது.
