வேகம் எடுக்கும் மெரினா ரோப்கார் பணிகள்! டெண்டர் கோரும் சென்னை மாநகராட்சி
வேகம் எடுக்கும் மெரினா ரோப்கார் பணிகள்! டெண்டர் கோரும் சென்னை மாநகராட்சி
ADDED : டிச 04, 2024 08:01 AM

சென்னை: சென்னை மெரினாவில் ரோப்கார் சேவைக்கான கட்டுமான பணிகளுக்கு சென்னை மாநகராட்சி டெண்டர் கோரி உள்ளது.
சென்னையில் மக்களின் முக்கிய பொழுதுபோக்கு இடங்களில் முதன்மையானது மெரினா கடற்கரை. காலை, மாலை என எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் காணப்படும். பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் கட்டுக்கடங்காத வகையில் மக்கள் குடும்பத்துடன் வந்து செல்கின்றனர்.
மக்கள் மனம் கவர்ந்த மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் இடையே ரோப் கார் சேவை தொடங்கவேண்டும் என்று கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வந்தன. மக்களின் கோரிக்கையை ஏற்ற சென்னை மாநகராட்சி விரைவில் ரோப் கார் சேவை அமைக்கப்படும் என்று அறிவித்தது.
இந் நிலையில், முதல் கட்டமாக ரோப் கார் சேவைக்கான கட்டுமான பணிகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை சென்னை மாநகராட்சி வெளியிட்டு உள்ளது. ரோப் கார் சேவை கட்டுமான பணிகளுக்கு டெண்டர் கோரலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
டிச.17ம் தேதிக்குள் இணையம் மூலம் டெண்டர் கோரி விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. திட்ட மதிப்பாய்வு, கட்டுமான வடிவமைப்பு, தொழில்நுட்ப அம்சங்கள் என விரிவான அறிக்கை உள்ளிட்டவற்றை அளிக்குமாறும் சென்னை மாநகராட்சி கோரி உள்ளது.