இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நிலையான விதிமுறைகள் உருவாக்கப்படும் கரூர் விவகாரத்தில் முதல்வர் உறுதி
இந்தியாவுக்கே வழிகாட்டும் வகையில் நிலையான விதிமுறைகள் உருவாக்கப்படும் கரூர் விவகாரத்தில் முதல்வர் உறுதி
ADDED : அக் 04, 2025 08:05 PM
சென்னை:'கரூர் துயர சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு விசாரணையில், முழு உண்மைகளையும் வெளிக்கொண்டு வருவோம்' என, முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
விசாரணை அவரது அறிக்கை:
கரூர் துயரம் குறித்து, சென்னை உயர் நீதி மன்றம் கூறியுள்ள கருத்துகள், வழிகாட்டுதல்கள் அனை த்தையும், தமிழக அரசு மிகத்தீவிரமாக கவனத்தில் கொண்டு செயலாற்றி வருகிறது.
கரூரில் நடந்த துயரத்தால், நாம் அனைவருமே நெஞ்சம் கலங்கிப் போயிருக்கிறோம்.
தம் அன்புக்குரியோரை இழந்து தவிக்கும் ஒவ்வொரு குடும்பத்தின் கண்ணீரையும் கண்டு தவிக்கிறேன்.
உயர் நீதிமன்ற உத்தரவில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு, தன் விசாரணையைத் துவங்கும்.
இதன் வாயிலாக முழு உண்மையையும் வெளிக்கொண்டு வருவோம் என்று, மாநிலத்தின் முதல்வராக மக்களுக்கு உறுதியளிக்கிறேன். அனைத்து மட்டங்களிலும் பொறுப்பு உறுதி செய்யப்படும். பலவற்றிலும் இந்தியாவுக்கே முன்னோடியான தமிழகம், கூட்ட நெரிசல் விபத்துகளை தவிர்ப்பதிலும், நாட்டுக்கு வழிகாட்டும். மாநிலம் முழுதும் துறைசார் வல்லுநர்கள், அரசியல் கட்சியினர், செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என, அனைவரோடும் கலந்தாலோசித்து, ஒரு முழுமையான, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வடிவமைப்போம்.
துயர சம்பவம் தமிழகத்திற்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவும் பின்பற்றத்தக்க மாடலாக இது அமையும். துடைக்க முடியாத இந்த துயர சம்பவத்தின் பின்னணியில், அரசியல் நோக்கோடு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டாமல், ஒரு நீண்டகால தீர்வை நோக்கிப் பயணிப்போம்.
இந் தக் கூட்டு முயற்சியில் அனைவரது யோசனைகள், ஆலோசனைகளையும் வரவேற்கிறேன். ஒவ்வொரு உயிரும் விலை மதிப்பில்லாதது.
நம் மக்களின் இன்னுயிரைக் காக்கவும், இனி இப்படி ஒரு பெருந்துயரம் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்தியாவில் எங்குமே நிகழாமல் தடுக்கவும் ஒன்றிணைவோம்.
இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.