ADDED : பிப் 21, 2025 01:07 AM
சென்னை:'மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, இந்தியா - இலங்கை கூட்டு பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்' என, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து, மூன்று மீன்பிடி படகுகளில் சென்ற 10 மீனவர்களை, கடந்த 19ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள், சில மாதங்களில் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதனால், மீனவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் வாழ்வாதாரம் நீண்ட காலம் பாதிக்கப்படுகிறது. இத்தகைய கைது நடவடிக்கைகளை தடுக்க, தொடர்ச்சியான துாதரக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும், இலங்கை அதிகாரிகளிடம் இருந்து விடுவிக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, ஏற்கனவே வலியுறுத்தியபடி கூட்டுப் பணிக்குழு கூட்டத்தை கூட்ட வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறியுள்ளார்.