" என்ன கவி பாடினாலும் முதல்வர் மனம் இரங்கவில்லை " - டாக்டர்கள் கவலை
" என்ன கவி பாடினாலும் முதல்வர் மனம் இரங்கவில்லை " - டாக்டர்கள் கவலை
ADDED : செப் 16, 2024 11:55 AM

பல ஆண்டுகளாக, பல முறை பல விதங்களில் வலியுறுத்தியும் அரசு மருத்துவர்களின் கோரிக்கைகள் கிடப்பில் போடப்பட்டிருப்பதாக டாக்டர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்கள் சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள்பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
10 கேள்விகள்
அமெரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து விட்டு, தமிழகம் திரும்பியுள்ள தமிழக முதல்வருக்கு அரசு மருத்துவர்கள் எழுப்பியுள்ள 10 கேள்விகள்: 01. கொரோனா பேரிடரில் பணியாற்றி உயிரிழந்த அரசு மருத்துவர் விவேகானந்தன் மனைவி, அரசு வேலை கேட்டு, கண்ணீருடன் முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்த பிறகும், அரசு
கருணை காட்டவில்லையே. ஏன்?
2) திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிச்சயம் நிறைவேற்றப்படும் என உறுதியளித்து விட்டு, இன்று முதல்வராக, கோரிக்கையை நிறைவேற்றும் இடத்தில் இருந்தும் சொன்னதை செய்யவில்லையே. ஏன்?
3) அன்று மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் லட்சுமி நரசிம்மன், மன உளைச்சலால், மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த போது, அதிமுக அரசை மருத்துவ சமுதாயம் ஒருபோதும் மன்னிக்காது என திரு. மு.க. ஸ்டாலின் கடுமையாக கண்டித்து அறிக்கை விட்டார். ஆனால் அன்று டாக்டர் LN எதற்காக உயிரை தியாகம் செய்தாரோ, அந்த கோரிக்கையை இதுவரை நிறைவேற்ற வில்லையே. ஏன்?
5) தமிழகத்தில் திமுக ஆட்சியில், அதுவும் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில் கலைஞரின் அரசாணைக்கு தடை போடுவது ஏன்?
6) நாடு முழுவதும் அரசு மருத்துவர்களுக்கு எய்ம்ஸ் க்கு இணையான ஊதியம் தரப்பட வேண்டுமென தேசிய மருத்துவ ஆணையம் அறிவுறுத்திய போதிலும், அதை செயல்படுத்த அரசு ஆர்வம் காட்டாதது ஏன்?
7) மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட, 40 ஆயிரம் ரூபாய் குறைவாக, இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுவது எந்த வகையில் நியாயம்?
8) கொரோனா தொற்று உச்சத்தில் இருந்த போது உறுதுணையாக இருந்த அரசு மருத்துவர்களை, தொடர்ந்து தங்கள் ஊதியத்திற்காக போராட வைப்பது எந்த வகையில் நியாயம்?
9) அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை ஆறு வாரத்திற்குள் நிறைவேற்ற, சென்னை உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்ட பிறகும், நிறைவேற்றவில்லை. அதாவது உயிர்காக்கும் மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக நீதிமன்ற படிக்கட்டுகளை ஏற வைப்பது இந்த அரசுக்கு அவமானம் இல்லையா?
10) ஒருபுறம் சுகாதார துறையில் தமிழகம் முன்னணி மாநிலமாக இருக்கிறது. இன்னொரு புறம், நாட்டிலேயே அரசு மருத்துவர்களை தொடர்ந்து வேதனைப்பட வைப்பதும், அரசு மருத்துவர்கள் உயிரிழப்பு அதிகமாக உள்ளதும், தமிழகம் என சொல்லப்படுகிறதே? இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.