ஜெர்மனியில் இருந்தாலும் சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!
ஜெர்மனியில் இருந்தாலும் சென்னை மழை குறித்து கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்!
ADDED : ஆக 31, 2025 02:02 PM

சென்னை: தமிழகத்திற்கான முதலீடுகளை ஈர்க்க, ஜெர்மனி சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் அங்கே இருந்தே சென்னை மழை பாதிப்பு குறித்து கேட்டறிந்தார்.
சென்னை மணலியில் மேகவெடிப்பு காரணமாக, நேற்றிரவு 271.5 மி.மீ மழை கொட்டி தீர்த்துள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த சூழலில், வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின் சென்னை பெய்த மழை நிலவரம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று இரவு பெய்த மழை அளவு குறித்தும் அதனால் சாலைப்போக்குவரத்து, மழை நீர் வடிகால் மற்றும் தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் முதல்வர் ஸ்டாலின் தொலைபேசியில் கேட்டறிந்தார்.
நேற்று இரவு பெய்த கனமழையால் மாநகரில் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லையெனவும் சுரங்கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. எனினும், எத்தகைய மழைச்சூழலையும் எதிர்கொள்ள கூடிய அளவில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பெரு மழை காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிடவும் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார்.
இவ்வாறு சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

