திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
திருவண்ணாமலையில் 'மினி டைடல் பூங்கா' அடிக்கல் நாட்டினார் முதல்வர் ஸ்டாலின்
ADDED : ஆக 01, 2025 09:41 PM

சென்னை:முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், பல்வேறு பகுதிகளில் முடிவுற்ற பணிகளை துவக்கி வைத்ததுடன், பல புதிய பணிகளுக்கும், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே அடிக்கல் நாட்டினார்.
அதன் விபரம்:
திருவண்ணாமலையில் 37 கோடி ரூபாய் மதிப்பில், 63,200 சதுர அடியில், 'மினி டைடல் பூங்கா' கட்டப்பட உள்ளது. இதன் வாயிலாக, 600 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும். இதற்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.
சுற்றுலாத்துறை சார்பில், தென்காசி - குண்டாறு அணையில் 1.50 கோடி ரூபாயில் வரவேற்பு மையம், உணவகம்; திருப்பத்துார் மாவட்டம் ஏலகிரியில், 2.98 கோடி ரூபாயில், நுழைவு பகுதி, உணவக கட்டடம் கட்டப்பட்டுள்ளன.
புதுக்கோட்டை மாவட்டம் முத்துகுடா கடற்கரையில், 3.06 கோடி ரூபாயில் படகுத்துறை, நடைபாதை உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
மதுரையில் ஹோட்டல் தமிழ்நாடு வளாகத்தில், 7 கோடி ரூபாயில் புதிய உணவக கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இவற்றை முதல்வர் திறந்து வைத்தார்.
சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில், 6.84 கோடி ரூபாயில் கட்டப்பட்ட புதிய நிர்வாக கட்டடத்தையும், முதல்வர் திறந்து வைத்தார்.
தேசிய அளவில் சிறப்பாக செயல்பட்டதற்காக, அரூர் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, செங்கல்வராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை, கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை.
தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை, செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆகியவற்றுக்கு, தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் சம்மேளனத்தின் விருது கிடைத்துள்ளது. இந்த விருதுகளை முதல்வரிடம் காண்பித்து, சர்க்கரைத்துறை அமைச்சர் ராஜேந்திரன் வாழ்த்து பெற்றார்.
அரூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை சார்பில், 10.23 கோடி ரூபாய்; கள்ளக்குறிச்சி - 2 கூட்டுறவு சர்க்கரை ஆலை வாயிலாக, 12.3 கோடி ரூபாய், தமிழக அரசின் பங்கு தொகையாக வழங்கப்பட்டது.
இதற்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.