இஸ்ரேல் - ஈரானில் தமிழர்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
இஸ்ரேல் - ஈரானில் தமிழர்களுக்கு உதவ முதல்வர் ஸ்டாலின் உத்தரவு
UPDATED : ஜூன் 22, 2025 04:16 AM
ADDED : ஜூன் 22, 2025 01:10 AM

சென்னை:இஸ்ரேல் - ஈரானில் உள்ள தமிழர்களுக்கு உதவ, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதற்காக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
இஸ்ரேல் - ஈரான் இடையே போர் நடந்து வரும் நிலையில், அந்நாடுகளில் வசிக்கும் தமிழர்களின் விபரங்களைப் பெற்று, அவர்களுக்கு உடனடியாக தேவைப்படும் அனைத்து உதவிகளையும் வழங்க, அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறைக்கு, முதல்வர் ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
கண்காணிப்பு
இந்திய வெளியுறவுத் துறை வாயிலாக, ஈரானிலிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பத் துவங்கியுள்ளனர். இவர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களை கண்டுபிடித்து, பாதுகாப்பாக அழைத்து வரும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.
மேலும், அங்குள்ள நிலைமை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தமிழர்களுக்கு தேவைப்படும் உதவிகளை செய்ய, தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது.
இதற்கென டில்லி தமிழ்நாடு இல்லத்தில், 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. 011 - 24193300, 92895 16712 என்ற தொலைபேசி எண்களிலும், tnhouse@tn.gov.in, procofficetnh@gmail.com என்ற இ - மெயில் முகவரியிலும் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம்.
உதவி எண்கள்
சென்னையில் உள்ள, தமிழக அரசின் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில், 24 மணி நேரமும் செயல்பட்டு வரும், 1800 309 3793, 80690 09901 ஆகிய கட்டணமில்லா உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.