வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதில் தனி கவனம் பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
ADDED : ஏப் 02, 2025 07:57 PM
சென்னை:'சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும், வக்ப் அமைப்புகளை பாதுகாப்பதிலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கடித விபரம்:
இந்திய அரசமைப்புச் சட்டம், ஒவ்வொரு குடிமகனுக்கும் அவரவர் மதங்களைப் பின்பற்றுவதற்கான உரிமையை வழங்குகிறது; அந்த உரிமையை நிலைநாட்டுவதும், பாதுகாப்பதும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களின் கடமை.
இருப்பினும், வக்பு சட்டம், 1995ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்கள், சிறுபான்மையினருக்கு அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பைக் கருத்தில் கொள்ளவில்லை. இஸ்லாமிய சமூகத்தின் நலனுக்கு கடுமையான பாதிப்புகளை விளைவிப்பதாக உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள வக்பு சட்டத்தில் உள்ள அம்சங்கள், நீண்ட காலமாகச் சிறந்த பயன்பாட்டில் உள்ளன. வக்பு சொத்துக்களுக்கு பாதுகாப்பு அளிப்பதாகவும் உள்ளன. வக்பு சட்டத்தில் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ள திருத்தங்கள், வக்பு சொத்துக்களை நிர்வகிப்பதிலும் பாதுகாப்பதிலும், வாரியத்தின் அதிகாரங்களையும் பொறுப்புகளையும் பலவீனப்படுத்தும் வகையில் உள்ளன.
சட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் முன்மொழியப்பட்டுள்ள பெரிய அளவிலான திருத்தங்கள், அச்சட்டத்தின் நோக்கத்தையே நீர்த்துப்போகச் செய்து விடும். உதாரணமாக, மாநில வக்பு வாரியங்களில் இரண்டு இஸ்லாமியர் அல்லாத உறுப்பினர்களை கட்டாயமாக சேர்ப்பது, அந்த சமூகத்தின் மத மற்றும் தொண்டு அறக்கட்டளைகளை சுயாதீனமாக நிர்வகிக்கும் திறன் மற்றும் மத சுயாட்சியை குறைத்து மதிப்பிடுவதாக அமைகிறது.
விதியை நீக்குவது, பல வரலாற்று அடிப்படையிலான வக்பு சொத்துக்களின் உரிமைக்கு அச்சுறுத்தலாக அமையும். குறைந்தது ஐந்து ஆண்டுகள் இஸ்லாத்தை கடைப்பிடித்தவர்கள் மட்டுமே, வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்க முடியும் என்ற நிபந்தனை, இஸ்லாமியர் அல்லாதவர்கள் வக்புக்கு சொத்துக்களை நன்கொடையாக வழங்குவதைத் தடுத்து விடும்.
இது, நாட்டின் மத நல்லிணக்க கலாசாரத்திற்கு இடையூறாக இருக்கும். தற்போதுள்ள, 1995ம் ஆண்டு வக்பு சட்டம் போதுமானதாகவும், வக்புகளின் நலன்கள் மற்றும் சொத்துக்களைப் பாதுகாக்க தெளிவான ஏற்பாடுகளை கொண்டிருக்கிறது. எனவே, அதில் இப்போது திருத்தங்கள் தேவையில்லை.
இதை கருத்தில் கொண்டு, வக்பு திருத்த சட்டம் 2024 முழுமையாக திரும்ப பெற வேண்டும். இக்கடிதத்துடன், தமிழக சட்டசபையில் இயற்றப்பட்ட தீர்மான நகல் இணைக்கப்பட்டுள்ளது. சிறுபான்மை இஸ்லாமிய மக்களின் நலன்களை பாதுகாப்பதிலும் வக்பு அமைப்புகளை பாதுகாப்பதிலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

