ADDED : அக் 25, 2024 02:25 AM
சென்னை:'இலங்கை சிறையில் உள்ள தமிழகத்தைச் சேர்ந்த 128 மீனவர்களையும், 199 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க, உரிய துாதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 16 மீனவர்கள், நெடுந்தீவு கடற்பரப்பில் மீன் பிடித்து கொண்டிருந்த போது, எல்லை தாண்டி மீன் பிடித்ததாக அக். 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு உள்ளனர். இது போன்ற கைது சம்பவங்கள் தொடர்வது, மீனவர்களின் குடும்பங்களுக்கு துயரத்தை ஏற்படுத்துகின்றன.
தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க வேண்டும். இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 128 பேரையும், அவர்களின் 199 மீன்பிடி படகுகளையும் விரைவாக விடுவிக்க, உரிய துாதரக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கூட்டு நடவடிக்கை குழு முன்மொழிந்த ஆலோசனைகள், மீனவர்கள் வாழ்வை சீர்க்குலைக்கும். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.