'சட்டத்தை புரிந்து கொள்ளாத முதல்வர்' பா.ஜ., அண்ணாமலை விளக்கம்
'சட்டத்தை புரிந்து கொள்ளாத முதல்வர்' பா.ஜ., அண்ணாமலை விளக்கம்
ADDED : மார் 13, 2024 12:12 AM
சென்னை:''தமிழக அரசியல் கட்சிகள், குடியுரிமை திருத்த சட்டத்தில் என்ன குறையைச் கண்டுபிடித்தன? அந்த சட்டம் என்ன என்றே தெரியாமல், தங்கள் கருத்தை சொல்கின்றன,'' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை, கமலாலயத்தில் நேற்று அண்ணாமலை அளித்த பேட்டி:
கடந்த, 2005 காங்கிரஸ் ஆட்சியில் குடியுரிமை சட்ட திருத்தம் செய்யப்பட்டது. அந்த சட்டம் குறித்து, அரசியல் கட்சிகள் கொடுப்பது போல், ஒரு வரியில் அறிக்கை தெரிவிக்க முடியாது.
குடியுரிமை சட்டம் என்ன வென்றே தெரியாமல், தமிழகத்தில் சில கட்சிகள் தங்கள் கருத்தை சொல்கின்றன.
அகதிகளை திருப்பி அனுப்புவது இந்தியாவில் நடைமுறையில் இல்லை. அவர்கள் இங்கே தங்கியிருக்கலாம். அவர்களது நாட்டில் பிரச்னை முடிந்த உடன், அனுப்பப்படுவர்.
ஒருவர் குடியுரிமை பெற, தான் வசித்த கடைசி, 14 ஆண்டுகளில், 11 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும்.
நமது, 2019 சட்ட திருத்தம், 2014 டிச., 31க்கு முன் இந்தியாவிற்கு வந்த பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்தில் இருந்து வந்த ஆறு மதத்தினர், அவர்களுக்கு ஐந்து ஆண்டுகள் போதும் என்று கூறுகிறது. அவர்களை இந்திய குடிமக்களாக, குடியுரிமை வழங்கப்படும்.
தமிழக அரசியல் கட்சிகள் இந்த சட்டத்தில் என்ன குறையை கண்டுபிடித்தனர்?
இச்சட்டம் யாருக்கு எதிரானது என்பதை, எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழக கட்சிகள் கூற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்த வாக்கியம், முஸ்லிம்களின் குடியுரிமையை நீக்குவோம் என, கூறியுள்ளது? குடியுரிமையை கொடுக்கும் சட்டம் தான் குடியுரிமை சட்டம்.
இலங்கைத் தமிழர்களை பொறுத்தவரை, 1986ல் உள்துறை அமைச்சரவை போட்ட உத்தரவைத் தான், இன்றுவரை பின்பற்றுகிறது தமிழக அரசு.
அதன்படி, இலங்கையில் பிரச்னை முடிந்த உடன் அவர்கள் நாடு திரும்ப வேண்டும். அவர்களில், 11 ஆண்டுகளுக்கு மேல் வசித்த பலருக்கு, குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது.
மக்களை குழப்பி, திசை திருப்பும் வேலையை தமிழகத்தில் சில கட்சிகள் செய்கின்றன. குடியுரிமையை கொடுக்கும் அதிகாரம் மத்திய அரசுக்கு மட்டுமே உண்டு.
இலங்கை அகதிகள் அனைவருக்கும், சட்டப்படி விரைந்து இந்திய குடியுரிமை கொடுக்க வேண்டும் என்பதே தமிழக பா.ஜ.,வின் நிலைப்பாடு.
முதல்வருக்கு எந்தளவு அரசியல் சட்டம் தெரிந்துள்ளது என, சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

