பாகிஸ்தான் சிறையில் 7 தமிழக மீனவர்கள் விடுவிக்க முதல்வர் கடிதம்
பாகிஸ்தான் சிறையில் 7 தமிழக மீனவர்கள் விடுவிக்க முதல்வர் கடிதம்
ADDED : நவ 21, 2024 02:39 AM
சென்னை:'பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழகத்தை சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட, 14 பேர், குஜராத்தின் போர்பந்தரில் இருந்து மீன்பிடிக்க சென்றபோது, ஜன.,3ல் பாகிஸ்தான் கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பத்து மாதங்கள் முடிந்துள்ள நிலையில், மீனவர்களின் தற்போதைய நிலை குறித்தோ, அவர்களை விடுவிப்பதற்கான முயற்சிகள் குறித்தோ, எவ்வித தகவலும் இல்லை. மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக, நீண்ட காலமாக நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. பொருளீட்டும் மீனவர்கள் இல்லாததால், அவர்களை சார்ந்துள்ள குடும்ப உறுப்பினர்கள், மிகுந்த மனவேதனையுடன் உள்ளனர்.
பாகிஸ்தான் கடற்படையினரால் நீண்ட காலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், மனிதாபிமான அடிப்படையில் அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி இயந்திர படகுகளையும் விடுவிக்க, உறுதியான துாதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.