தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு
தங்கம் தென்னரசு அறிவிப்புக்கு தலைமை செயலக சங்கம் எதிர்ப்பு
ADDED : ஜன 11, 2025 11:50 PM
சென்னை:'பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு மாற்றாக, புதிய ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் அமல்' என்ற, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசுவின் அறிவிப்புக்கு, தமிழக தலைமை செயலக சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சங்க தலைவர் வெங்கடேசன், செயலர் ஹரிசங்கர் அறிக்கை:
கடந்த நான்கு ஆண்டுகளாக, முதல்வர் ஸ்டாலின் பல்வேறு அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில், 'தி.மு.க.,வின் 2021 தேர்தல் வாக்குறுதிகள், 100 சதவீதம் நிறைவேற்றப்படும்' என்ற உத்தரவாதத்தை அளித்துள்ளார்.
ஆனால், அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களை பொறுத்தவரை, 100 சதவீதம் எந்த வாக்குறுதிகளையும் அரசு நிறைவேற்றவில்லை.
இதுவரை, மத்திய அரசின் குழுவையும், ஆந்திர அரசின் குழுவையும் கைகாட்டி கொண்டிருந்தனர்; அவை வந்து விட்டன. தற்போது, வழிகாட்டு நெறிமுறைகள் வர வேண்டும் என்று கூறுகின்றனர். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த, எத்தனை குழுக்களை தான் அமைப்பர்?
தேர்தல் வாக்குறுதிக்கு முரணாக, அரசு ஊழியர்கள் - ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் நிறைவேற்றப்படாது என்பதை, பொங்கல் பரிசாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
நிதி அமைச்சரின் அறிவிப்பை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டம், சரண் விடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை, பட்ஜெட்டில் அறிவிக்க வலியுறுத்தியும், வரும் 24ம் தேதி மதியம் 1:30 மணிக்கு, உணவு இடைவேளை கூட்டம் நடக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.